ராமேஸ்வரம் - பழனி, தாம்பரம்.. 4 புதிய ரயில் சேவைகள்.. பயணிகள் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுது
சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து பழனிக்கு நேரடி ரயில் சேவை வேண்டும் என பயணிகளின் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்த நிலையில் வரும் 1 ஆம் தேதி முதல் மங்களூர் செண்ட்ரல் - ராமேஸ்வரம் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இது மட்டும் இன்றி மேலும் 3 ரயில்களின் சேவையையும் பிரதமர் மோடி அதே தினத்தில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் ஆன்மிக நகரங்களான ராமேஸ்வரத்தில் இருந்து பழனிக்கு நேரடி ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது.

ராமேஸ்வரம் பழனி இடையே ரயில்
பயணிகளின் இந்த எதிர்பர்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் இருந்து பழனி வழியாக கேரளாவின் மலபாருக்கு ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டுகள் சென்றாலும் இந்த ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால், வெறும் அறிவிப்போடு நின்று விடுமோ என பயணிகள் நினைத்த நிலையில், ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் பயணிகள் மூன்று ஆண்டுகள் காத்திருப்புக்கு முடிவு கட்டும் வகையில் வரும் 1 ஆம் தேதி அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. மங்களூர் செண்ட்ரல் - ராமேஸ்வரம் ரயிலை பிரதமர் மோடி வரும் 1 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுமட்டுமின்றி மொத்தம் 4 ரயில்களின் சேவையை மோடி தொடங்கி வைக்கிறார்.
4 புதிய ரயில்கள் என்னென்ன?
மங்களூர்- ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், தாம்பரம் - மங்களூர் சந்திப்பு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், கோவை - தன்பாத் அம்ரித் பாரத், நாகர்கோயில் - சார்லபள்ளி ஆகிய இடங்களுக்கு இடையே ரயில்கள் இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து மங்களூருக்கு வண்டி எண் 16621/16622 என்ற ரயிலை கடந்த மார்ச் 2024 ல் ரயில்வே வாரியம் அறிவித்தது. எனினும், பாம்பன் புதிய பாலம் கட்டுமான பணிகள் காரணமாக ரயில் நிலையம் மூடப்பட்டு இருந்தது. புதிய பாலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது.
ஆன்மிக பயணிகள்
இதையடுத்து, ராமேஸ்வரத்தில் இருந்து பழனி வழியாக வடகேரளாவை இணைத்து மங்களூருக்கு செல்லும் வழியில் அறிவிக்கப்பட்ட ரயிலை விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் முன்வைக்பட்டது. ஆன்மிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பயணிப்பவர்களுக்கு இந்த வழித்தடம் முக்கியமானதாக இருக்கும் என்பது பயணிகள் கருத்தாக இருந்தது.
உத்தேச கால அட்டவணை
இந்த ரயில் மங்களூரில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 10.50 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் பாலக்காடு, மதுரை மற்றும் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும்.
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மங்களூருக்கு திங்கள் கிழமை அதிகாலை 6.55 மணிக்கு வந்தடையும் என்று கால அட்டவணை முன்மொழியப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ரயில்வே வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications