பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டார் உயர் கல்வி அமைச்சர் அன்பழகன்
சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பத்திவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், ரேண்டம் எண் ஒதுக்கீட்டை வெளியிட்டார்.
தமிழகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 1,80,000 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 2ம் தேதி தொடங்கி 31ம் தேதி நிறைவுற்றது.

நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப இயக்குநரகம் நடத்துகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 1,33,116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் என்ற சமவாய்ப்பு எண் இன்று வெளியிடப்பட்டது.
ரேண்டம் எண்ணை பயன்படுத்தியே, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தர வரிசை பட்டியலை தயாரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் போது, யாருக்கு முன்னுரிமை என்பதில் குழப்பம் ஏற்படும். அப்போது, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர், முதலில் தேர்வு செய்யப்படுவார். அதில், இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், இயற்பியல் மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும்.
இதிலும் சம மதிப்பெண் பெற்றிருந்தால் 2 மாணவர்களின் நான்காவது முக்கிய பாடமான உயிரியல் அல்லது கணினி அறிவியல் போன்றவற்றில், அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும். இதிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதியில் யார் மூத்தவர் என பார்க்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் தான் ரேண்டம் எண் என்ற சம வாய்ப்பு எண் கணக்கில் எடுக்கப்படும்.
ரேண்டம் எண்ணை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். ரேண்டம் எண்ணை இணையதளத்தில் பார்க்கலாம் எனவும் மொபைல் எண்களுக்கும் அனுப்பப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 42 மையங்களில் நடைபெற உள்ளது மேலும் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், ஜூன் 17ம் தேதி வெளியாகிறது. பின்னர் ஜூன் 20ம் தேதியிலிருந்து பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications