ராணிப்பேட்டை தொகுதி! கடைசி நேரத்தில் அடித்து பிடித்து தாக்கல் செய்த ஆர்.காந்தி வேட்புமனு ஏற்பு!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டசபை தொகுதி வேட்பாளராக கடைசி நேரத்தில் களமிறங்கிய அமைச்சர் ஆர்.காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது. காந்தியின் மகன் வினோத் தனக்கு கிடைத்த வாய்ப்பை தனது தந்தைக்கு விட்டுக் கொடுத்தார்.
ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியின் கோட்டை என சொல்லப்படுகிறது. இங்கு அவர் 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். அதாவது 20 ஆண்டுகள் ராணிப்பேட்டைக்கு எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஆனால் 2011, 2001 ஆகிய ஆண்டுகளில் தோல்வியடைந்தார். தற்போது இந்த தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக களம் காண்கிறது. பாஜக சார்பில் விஎம் கார்த்திகேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாரிகா சல்மான் மற்றும் தவெக சார்பில் தாஹீரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் காந்திக்கு வயதாகிவிட்டதாலும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும் வரும் தேர்தலில் திமுக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இதற்கு ஆர்.காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தனக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும் என தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வினோத் காந்தி, ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என கூறியிருந்தார்.
மேலும் தனக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த அவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை தந்தைக்கு விட்டுக் கொடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஆர்.காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், என் மகனுடன்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். தொகுதியில் எந்த சண்டையும் இல்லை. ஸ்டாலினின் ஒப்புதலுடன்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளேன் என காந்தி தெரிவித்தார்.
அது போல் அவரது மகன் வினோத் கூறுகையில், "என் தந்தை போட்டியிட விரும்பினார். அவரது ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் களப்பணியாற்ற முடியாது. அது போல் திமுக தலைமையும் என் தந்தைக்கு Form B வழங்கியதால் நான் போட்டியில் இருந்து விலகிக் கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதில் கடைசி நேரத்தில் வேட்புமனுதாக்கல் செய்த ஆர்.காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.












Click it and Unblock the Notifications