காரை உரசிய பைக்.. திடுதிப்பென வந்த 10 பேர்.. திருவேற்காட்டில் ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் கடத்தல்
சென்னை: சென்னை திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ரேப் மியூசிக் கலைஞர் தேவ ஆனந்த். இவர் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த வேர்ல்ட் மியூசிக் டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர் தனது நண்பர்கள் கெவின், கிளப்பன் கிரிஷ், முகமது இப்ராஹிம் ஆகியோருடன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் திருவேற்காடு அருகே சென்றனர். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றது.

அப்போது அந்த கார் மீது இரு சக்கர வாகனம் ஒன்று உரசியபடி சென்றது. இதையடுத்து காருக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டதா என்பதை பார்க்க இப்ராஹிம் காரில் இருந்து வெளியே இறங்கி காரை சுற்றி சுற்றி பார்த்துள்ளார். அப்போது எதிரே ஒரு எஸ்யூவி கார் வந்தது. அதில் 10 நபர்கள் இருந்தனர்.
அவர்கள் இப்ராஹிம் காரில் இருந்த தேவ் ஆனந்தை கத்தி முனையில் கடத்தி சென்றனர். இதையடுத்து அவரது நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு காவல் துறையினர் தேவ் ஆனந்தின் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தனர். அதில் தேவ் ஆனந்த் பேசுகையில் தனது அண்ணன் சிரஞ்சீவி தொழில் சம்பந்தமாக 5 பேரிடம் 2.5 கோடி ரூபாய் கடன் வாங்கினார்.

அந்த 5 பேரும் தன்னை கடத்தி நல்ல நிலையில் வைத்திருப்பதாகவும் தேவ் ஆனந்த் தெரிவித்தார். ராப் கலைஞர் கடத்தப்பட்டது குறித்து திருவேற்காடு போலீஸார் தனிப்படை அமைத்து தேவ் ஆனந்தை கடத்திய கும்பலை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications