கஸ்டமரை போல் ரேபிட்டோ பைக்கை புக் செய்யும் ஓலா, ஊபர் டிரைவர்கள்.. தனியே வரவழைத்து தாக்குவதாக புகார்
சென்னை: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் தாக்குவதாக ரேபிட்டோ பைக், டாக்ஸி டிரைவர்கள் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகாரை அளித்துள்ளனர்.
ஓலா, ஊபர் செயலிகள் மூலம் கார், ஆட்டோக்களை புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை பெருகி விட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும் ஆட்டோவை தேடி தெருவுக்கு ஓடாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே புக் செய்யும் வசதி இருப்பதால் பெரும்பாலானோர் இந்த செயலிகளை பயன்படுத்துகிறார்கள்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கடைத்தெரு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், திறன் மேம்பாட்டு வகுப்புகள் என எங்கு செல்ல வேண்டுமானாலும் தங்களது இரு சக்கர வாகனத்தையோ நான்கு சக்கர வாகனத்தையோ எடுத்துச் செல்லாமல் இந்த செயலிகள் மூலம் வாகனத்தை புக் செய்யலாம்.
பேருந்து, ரயிலை பிடிப்பதற்கு ஆகும் நேரம் , அலைச்சல் எல்லாம் மிச்சம். அதைவிட பணமும் சொற்ப அளவில்தான் ஆகிறது என்கிறார்கள். இந்த நிலையில் வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓலா, ஊபர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ரேபிட்டோ நிறுவனத்தின் பைக் டாக்ஸியில் மிகவும் குறைவான தொகையே வசூலிக்கப்படுவதால் ஆண்கள் பெரும்பாலும் பைக் டாக்ஸியில் பயணம் செய்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஓலா, ஊபர் டாக்ஸி டிரைவர்கள் புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் ரேபிட்டோ பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ஓலா, ஊபர் கால் டாக்சி டிரைவர்களே வாடிக்கையாளர்கள் போல் புக் செய்து எங்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்துகிறார்கள் என புகாரில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications