குடும்ப அட்டைதாரர்களிடம், எகிறும் ஆர்வம்.."5 மாசமாயிடுச்சே".. முதல்வரின் தனிப்பிரிவுக்கு போன மெசேஜ்
சென்னை: சமீபகாலமாகவே, புதிய ரேஷன் கார்டுகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும்நிலையில், முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் காரணமாக கூட்டுக்குடும்பமாக இருந்த பலர், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனால், தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
2 கேஸ் சிலிண்டர்கள்: அந்தவகையில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? அந்த வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதற்கு பிறகு, உணவு வழங்கல் துறை, புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று வட்ட வழங்கல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.. எனவே, புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதனால், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்தியடைந்தனர்..
குடும்ப அட்டைகள்: அதேபோல, இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளுமே, இந்த 5 மாதமாகவே நடக்கவில்லை என்கிறார்கள்.
புதிய ரேஷன் கார்டு வேண்டுமானால், உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவருக்கு அடுத்த 15 நாட்களுக்குள் புதுகார்டு வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு அமலில் உள்ளது. அப்படியிருந்தும், இதுவரை புது கார்டுகள் வழங்கவில்லை என்கிறார்கள்.
முதல்வரின் தனிப்பிரிவு: இது தொடர்பாக உணவு துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், புதிய கார்டு விரைந்து வழங்க உத்தரவிட முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வருகிறோம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் சொல்லும்போது, "புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன், கள ஆய்வு பணிகளை தொடங்குவோம்.. ஆன்லைன் வழியாகவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சக்கரபாணி: சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார். அப்போது, "வருகிற மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறியிருந்ததுடன், புதிய ரேஷன் அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், பொங்கலுக்குள் புது ரேஷன் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications