காத்திருந்த பெண்களுக்கு நாளை சூப்பர் வாய்ப்பு! மகளிர் உரிமைத்தொகை.. மாற்றங்கள் செய்ய சிறப்பு முகாம்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு கட்டாயம். உரிமைத்தொகை பெறுவதற்காக ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்போருக்கு நாளை முக்கியமான நாள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளுக்கான சிறப்பு அப்டேட் முகாம் நாளை நடைபெறுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு அவசியம். இதனால் நிறைய பெண்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக ரேஷன் கார்டில் நமக்கு அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். அதோடு, ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் செய்தல், புதிய உறுப்பினரைச் சேர்த்தல் போன்ற அப்டேட்களைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த அப்டேட்களை உடனே நீங்கள் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் ரேஷன் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக தமிழ்நாடு அரசு தரப்பில் சிறப்பு அப்டேட் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த முகாம்களில் ரேஷன் கார்டில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ரேஷன் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெறலாம்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளுக்கான சிறப்பு அப்டேட் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அக்டோபர் மாதத்துக்கான முகாம் நாளை 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அக்டோபர் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடத்தபடும் என்று உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களுடைய கார்டுகளில் அப்டேட்டை மேற்கொள்ளலாம்.
இந்த வாய்ப்புக்காக நிறைய பேர் காத்திருந்த நிலையில் அதற்கான வாய்ப்பு வந்துவிட்டது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் இந்த குறை தீர்ப்பு முகாம்களை ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் ரேஷன் அட்டைதாரர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகள் அரசு தரப்பில் தீர்க்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க அலைந்து திரிந்து சிரமப்பட முடியாமல் முதியோர்கள் தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு தரப்பில் சிறப்பு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது. அவர்களுக்கு இந்த அங்கீகாரச் சான்று உதவியாக இருக்கும்.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இன்னும் சில நாட்களில் முதல் கட்ட பயனாளிகளின் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அப்டே்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த மகளிருக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1 கோடி 20 இலட்சம் பேருக்கு ரூ 1000 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். ஒரிரு மாதங்களில் புதிததாக விண்ணப்பத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications