எந்த வங்கி காசோலை என்றாலும், ஒரே நாளில் கிளியர்! அமலுக்கு வந்தாச்சு செம வசதி.. வாடிக்கையாளர்கள் குஷி
சென்னை: எந்த வங்கி செக் ஆக இருந்தாலும் டெபாசிட் செய்த அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து, இன்று முதல் காசோலைகள் ஒரே நாளில் கிளியர் ஆகும் என தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்.டி.எப்.சி , ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் தெரிவித்துள்ளன. இன்று முதல் காசோலைகள் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் கிளியர் ஆகும்.
வங்கி பரிவர்த்தனைகள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் முறையில் மாறிவிட்டாலும், காசோலை வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகளும் கணிசமான அளவில் உள்ளன. பெரிய அளவிலான தொகை மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் உள்ளிட்டவைகள் செக் எனப்படும் காசோலை வழியாகவே நடைபெறுகின்றன.

எந்த வங்கி 'செக்'ஆக இருந்தலும்
அதே வங்கி செக் ஆக இருந்தால், வங்கியில் செலுத்திய அன்றே சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதுவே பிற வங்கியின் காசோலை என்றால் மறுநாள்தான் ஆகும். அதிகபட்சம் மூன்று வேலை நாட்கள் வரை ஆகும் என்பதை பார்க்க முடிகிறது.
ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி, இனி எந்த வங்கி செக் (காசோலை) ஆக இருந்தாலும் வங்கியில் செலுத்திய அன்றே கிளியர் ஆகிவிடும். இந்த புதிய முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய வசதியின்படி, வங்கிகளில் டெபாசிட் செய்த அன்றே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
மாலை 7 மணிக்குள்
செக்கை வங்கியில் கொடுத்தவுடன் உடனடியாக ஸ்கேன் செய்து கிளியரிங் முகாமைக்கு வங்கி ஊழியர்களால் அனுப்பப்படும். அந்த முகாமையில் இருந்து செலுத்தும் வங்கிக்கு அது சென்றடையும். சம்பந்தப்பட்ட வங்கி அன்று மாலை 7 மணிக்குள் செக் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு பதிலும் சம்பந்தப்பட்ட வங்கி அளிக்கவில்லை என்றால், செக்-கானது தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்பட்டு, வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.
3 மணி நேரத்திற்குள்
அதுபோல, மோசடிகளை தடுக்கும் விதமாக பாசிட்டிவ் பே என்ற வசதியும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 50,000-க்கு மேல் உள்ள காசோலைகளுக்கு இந்த வசதி பரிந்துரைக்கப்படுகிறது. ரூ. 5,00,000-க்கு மேல் உள்ள செக்-களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, செக் நம்பர், தேதி, தொகை, பெறுபவரின் விவரங்களை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வங்கியில் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல, வரும் ஜனவரி முதல் செக் கொடுத்த 3 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட வங்கி அந்த பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா
வங்கிகளில் இன்று முதல் அமலுக்கு வரும் இந்த புதிய வசதியால், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் காசோலையை செலுத்திவிட்டு மறுநாள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. காசோலை ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது சம்பந்தப்பட்ட நாளிலேயே தெரிந்துவிடும் என்பதால் பயனர்களுக்கு இது மிகுந்த வசதியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications