ஆச்சரியம் நிறைந்த ஆர்சிபி.. சபாஷ் தந்த ஸ்டாலின்.. ஐபிஎல் பெங்களூரு அணிக்கு 18 வருடம் கழித்து ஹேப்பி
சென்னை: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.. கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து இந்த வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.. அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், வெற்றி பெற்ற அணிக்கு தன்னுடைய மனம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
18-வது IPL கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது..அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

விறுவிறு போட்டி
இதையடுத்து பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது... எனவே, 191 ரன் நிர்ணயிக்கப்பட்டது.. இந்த ரன்னை எடுத்தால், கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அடித்தாட துவங்கியது.. இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது.. பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர்குமார், குருணல் பாண்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அந்த அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது.. வெற்றியை பெங்களூரு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் விடிய விடிய கொண்டாடினர்.
முதலமைச்சர் வாழ்த்து
இந்நிலையில், முதல்முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "சபாஷ்.. ஆர்.சி.பி. பல ஆச்சர்யங்கள் நிறைந்த சீசனுக்கு நிறைவான ஒரு முடிவு. விராட் கோலி இந்தக் கோப்பைக் கனவை பல ஆண்டுகளாக சுமந்துள்ளார். இப்போது இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து அடுத்த சீசனில் சிறப்பான COME BACK-யை எதிர்பார்க்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியில் கோலி
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அளவுக்கு அதிகமாக நொந்து போனது விராட் கோலியும், பெங்களூர் அணியும்தான்.. இதுவரை கோப்பையை வென்றதில்லை.. இத்தனைக்கும் கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். வேறு எந்த வீரரும் இப்படியொரு சாதனையை செய்ததில்லை.. பெங்களூர் அணி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பை தந்து வந்தாலும், 17 சீசன்களிலும் கோப்பையை வெல்ல முடியாமல் மனம் நொந்து போனார் கோலி.. இதனால், அளவுக்கு அதிகமான விமர்சனங்களுக்கம் விராட் கோலி ஆளாகி வந்தார்.. எனினும், தன் மீதும், தன்னுடைய டீமி மீதும் மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தார்.. அந்த நம்பிக்கை இப்போது வீண் போகவில்லை என்பதையே இந்த வெற்றி நிரூபணம் செய்துள்ளது.. பெங்களூர் அணிக்காக எவ்வளவோ செய்தும்கூட, இன்னும் கப் அடிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் நிறைவேற்றிவிட்டார். இதையடுத்துதான், வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது கோலி & கோ.












Click it and Unblock the Notifications