ஜெய் ஷாவுக்கு என்னை யாரென்றே தெரியாது.. பதவி கிடைக்க அப்பா காரணமா? பொன்முடி மகன் அசோக் சிகாமணி!
சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அசோக் சிகாமணி, தனக்கு பதவி கிடைக்க யார் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர் பொன்முடியின் மகன், டிஎன்சிஏ தலைவராக பொறுப்பேற்றது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது.
இதுகுறித்து அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுடன் ஒப்பிட்டு, அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டதை கேள்வி எழுப்பி வந்தனர்.

அசோக் சிகாமணி
இதற்கு திமுக ஆதரவாளர்கள் தரப்பில் விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் அசோக் சிகாமணி பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐசிசி தலைவராக இருந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரமும் பலமும் மிக்க இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் அணியை சேர்ந்தவர் அசோக் சிகாமணி என்றும் சமூக வலைதளங்களில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி மகன்
இந்த நிலையில் அசோக் சிகாமணி எப்படி டிஎன்சிஏ தலைவர் பொறுப்புக்கு வந்தார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அசோக் சிகாமணி கூறுகையில், அமைச்சர் பொன்முடியின் மகன் என்பதால் எனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. இதுவரை சிபாரிசுக்காக யாரிடமும் கேட்டதில்லை. எனக்கு இந்தப் பதவி கிடைக்க முழுக்க முழுக்க இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீநிவாசன் மட்டுமே காரணம்.

ஸ்ரீநிவாசன் தான் காரணம்
அவரால் தான் எனக்கு முன்னதாக துணைத் தலைவர் பதவி கிடைத்தது. அதேபோல் ஸ்ரீநிவாசனால் தான் டிஎன்சிஏ தலைவர் பதவியும் கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். சிலர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் ஆதரவு தனக்கு இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால் ஜெய் ஷாவுக்கு என்னை யாரென்றே தெரியாது. கிரிக்கெட்டுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் அரசியல்
ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகிய முக்கிய பொறுப்புகளில் இருந்து ஸ்ரீநிவாசன் விலகினாலும், அவரது மகள் கடந்த சில ஆண்டுகளாக டிஎன்சிஏ தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் வாரிசுகளும், அரசியல்வாதிகளுமே பதவி வகித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித் ஷாவில் தொடங்கி ஏராளமானோர் அவரவர் மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவராக செயல்பட்டு, இன்று அரசியலில் உச்சத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications