நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனின் பதவி விலகலுக்கான உண்மையான காரணம், சமீபத்தில் நடந்த சம்பவம்தான். அதிமுக ஆட்சியில் பேரவையின் செயலாளராக இருந்தார் சீனிவாசன். நிர்வாக அனுபவமும், பேரவை சட்டவிதிகளும் இவருக்கு அத்துப்படி. அதனால்தான், அவரை தனது ஆட்சி காலத்தின் முழுமைக்கும் வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

2021-ல் ஆட்சி மாற்றம் நடந்து திமுக பொறுப்புக்கு வந்தது. முக்கிய பதவிகளில் இருந்த பலரும் மாற்றப்பட்டனர். அந்த வகையில் சீனிவாசனும் மாற்றப்படுவார் என பேரவை செயலக அதிகாரிகள் எதிர்பார்த்தனர். இன்னும் சொல்லப்போனால், சீனிவாசனே அதனை எதிர்பார்த்துத்தான் இருந்தார்.

Recent Incident Behind Tamil Nadu Assembly Secretary Srinivasan s Resignation

ஆனால், சீனிவாசனின் நிர்வாக திறமையையும் ஆற்றலையும் அறிந்திருந்த அன்றைய முதல்வர் ஸ்டாலின், சீனிவாசனை இடமாற்றம் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல், அன்றைய சபாநாயகர் அப்பாவுவிடம், "உங்க செக்ரட்டரி சீனிவாசன் அனுபவமிக்கவர். அவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த சந்தேகம் இருந்தாலும் என்னை தொடர்பு கொள்வதற்கு முன்பாக அவரிடம் பேசுங்கள். உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும்" என்று அட்வைஸ் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சீனிவாசன் பேரவையின் செயலாளராகவே நீடித்து வந்தார். 2023-ல் அவரது பணி ஓய்வு பெற்றார். ஆனால், அவரை வீட்டிற்கு அனுப்ப விரும்பாத அப்பாவு, "சீனிவாசனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கலாமே?" என்று ஸ்டாலினிடம் சிபாரிசு செய்தார். சீனிவாசனின் திறமை ஸ்டாலினுக்கு தெரியும் என்பதால், சீனிவாசனுக்கு 3 வருட காலம் பணி நீட்டிப்பு வழங்கியதுடன், அவருக்கு முதன்மை செயலாளர் என்ற பதவி உயர்வும் வழங்கினார் ஸ்டாலின்.

இதில் ஒரு விஷயம் என்னவெனில்... "2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணி நீட்டிப்பு வழங்க கூடாது என கொள்கை முடிவை எடுத்திருந்தது. ஆனால், அந்த கொள்கை முடிவை சீனிவாசனுக்காக ஓரமாக தள்ளி வைத்து விட்டு, பணி நீட்டிப்பு வழங்கினார் ஸ்டாலின். இந்த முடிவை அவர் எடுக்கிறார் எனில் சீனிவாசனின் பேரவை அனுபவம் அப்படிப்பட்டது என்கிறார்கள் பேரவை செயலக அதிகாரிகள்.

அப்படிப்பட்ட சீனிவாசன், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா முடிவு, பேரவை அதிகாரிகளிடம் மட்டுமல்லாமல், கோட்டை வட்டாரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக, அதிமுக அரசியல் கட்சிகளும் அதிர்ச்சியடைந்தன.

இதற்கான காரணம் என்னவென விசாரித்தபோது, "விரைவில் பட்ஜெட் தாக்கலுக்கான சட்டமன்ற கூட்டம் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக, சட்டப்பேரவையின் நிலைக் குழுக்களை நியமிக்க வேண்டும். பேரவையில் பொதுக் கணக்கு குழு, உரிமை மீறல் குழு உள்பட 12 நிலைக்குழுக்கள் இருக்கின்றன. அதாவது, 12 ஸ்டேண்டிங் கமிட்டிகள் இருக்கின்றன.

இந்த கமிட்டிகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்பட பேரவையில் இடம் பிடித்துள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நிலைக் குழுவில் பதவிகளை சபாநாயகர் வழங்குவார். அந்த வகையில், நிலைக்குழு பதவிகள் குறித்து சீனிவாசனிடம் இரண்டு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, பேரவையின் சட்டவிதிகளின் படி, ஆளும் கட்சியான தவெக வுக்கு எத்தனை பதவிகள், பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு எத்தனை இடங்கள், தவெகவின் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை? அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து விரிவாக விவரித்திருக்கிறார் சீனிவாசன். அப்போது, திமுகவுக்கு அவ்வளவு இடங்கள் கொடுத்துதான் ஆக வேண்டுமா? பொது கணக்கு குழுவின் தலைவர் பதவி பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்குத்தான கொடுத்தாக வேண்டுமா? என்றெல்லாம் அமைச்சர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இதனை சீனிவாசன் ஆமோதித்துப் பேச, "நீ என்ன திமுக ஆளா? திமுகவுக்கும் உங்களுக்கும் என்ன டீலிங்? நாங்கள் சொல்றபடி நிலைக்குழுக்களை அமைக்க வேண்டும்" என்று வற்புறுத்தியுள்ளனர். இதற்கு சீனிவாசன் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், ஒருமையில் அவர்கள் சீனிவாசனை அர்ச்சித்துள்ளனர். இதனால் கோபமாக எழுந்து சென்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் முறையிட்ட சீனிவாசன், "அமைச்சர்களுக்கு பேரவை விதிகள் எதுவும் தெரியவில்லை. சொன்னாலும் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் சார்" என்று சொல்ல, உடனே கோபப்பட்ட சபாநாயகர், "எதுவாக இருந்தாலும் அமைச்சர்கள் சொல்வதை நிறைவேற்றப் பாரு. இல்லைன்னா வேலையை விட்டுப் போய்டு" என்று எடுத்தெறிந்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து போன சீனிவாசன், உடனே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு போய்க்கொண்டேயிருந்தார். இதெல்லாம் முதல்வர் விஜய்க்கு தெரியுமா, தெரியாதா என தெரியவில்லை என்று சீக்ரெட் பின்னணிகளை ஆதங்கத்துடன் விவரிக்கிறது விபரம் அறிந்த சட்டப்பேரவை வளாகம்.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+