ஆஸி.-ல் இருந்து கைலாசாவுக்கு ஓசி ப்ளைட்- 3 நாட்கள் இலவச விசா - 'டகால்டி' நித்தியானந்தா தடாலடி
சென்னை: ஆஸ்திரேலியா வந்து சேருபவர்களை தமது கைலாசா நாட்டுக்கு கருடா எனப்படும் தமது நாட்டு சிறிய ரக விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்வோம் என்றும் கைலாசா நாட்டுக்கான விசா 3 நாட்கள் மட்டும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் என்று சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தடாலடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பலாத்கார வழக்கு உள்ளிட்டவைகளில் தேடப்படுகிறவர் நித்தியானந்தா. வெளிநாட்டு தீவு ஒன்றில் பதுங்கியபடி இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்தி இருக்கிறார். அவருக்கு எதிராக இண்டர்போல் போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸும் பிறப்பித்துள்ளனர்.
மேலும் நாள்தோறும் வீடியோக்கள் வெளியிட்டு பேசியும் வருகிறார். அப்படியான வீடியோ பதிவில் நித்தியானந்தா சில அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அதில் நித்தியானந்தா கூறியுள்ளதாவது:

இ மெயில் மூலம் விண்ணப்பம்
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் [email protected] என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.

அனைத்தும் இலவசம்
அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு தங்குமிட வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். வருகை தரக்கூடிய நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கைலாசா விமான சேவை
ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

3 நாட்கள் மட்டுமே.
விண்ணப்பிக்கின்ற நபர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க அனுமதி இல்லை. சிவனை வழிபடுகின்ற ஆன்மீக நோக்கத்தோடு மட்டுமே வருகை தரவேண்டும். ஒருநாள் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி. இவ்வாறு நித்தியானந்தா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications