மங்களகரமான நாள்.. சர்ப்ரைஸ் கொடுத்த பத்திரப்பதிவுத்துறை.. அலுவலகங்கள் இன்று செயல்படும் என அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆவணப்பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும் என்றும், மங்களகரமான நாட்களில் ஆவணப்பதிவுகளை மேற்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதால் அலுவலகங்கள் இன்று செயல்படும் என்றும், மேலும் இன்று விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப் பதிவுகளை பெரும்பாலானோர் முகூர்த்த நாட்களில் பதிவு செய்யவே விரும்புகிறார்கள். அதன்படி இன்று மங்களகரமான நாள் என்பதால், இன்று ஆவணப்பதிவுகளை மேற்கொள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி கோரி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தான் பத்திரப்பதிவுத்துறை விடுமுறை நாளான இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

இன்று பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும்
பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2024-25 ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15/- கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
காலை 10.00 மணி முதல்
மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித (நிலை) எண்.124/ஜே2/2024 நாள் 21.10.2024ன் வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாளுக்கான ஆவணப்பதிவு கட்டணம்
மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பணிசெய்யும் பதிவுத்துறை பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மங்களகரமான நாளான 03.02.2025 அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள்
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மங்களகரமான நாளான 03.02.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications