சாய்னா பற்றி ஆபாச கருத்து.. சைலேந்திர பாபுவிற்கு பறந்த லெட்டர்.. சித்தார்த்துக்கு பெரிய நெருக்கடி!
சென்னை: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சித்தார்த் கூறிய கருத்து தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு முக்கிய கடிதம் சென்றுள்ளது.
Recommended Video
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து நாடு முழுக்க பிரபலம் ஆனவர். சென்னை வெள்ளத்தின் போது உதவியது தொடங்கி சமூக ரீதியான பிரச்சனைகளிலும் அவ்வப்போது கருத்துக்களை இவர் கூறி வந்து இருக்கிறார்.
முக்கியமாக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக கருதப்படும் சித்தார்த் பிரதமர் மோடிக்கு எதிராக பல இடங்களில் கோபமாக பேசி இருக்கிறார். பாஜகவிற்கு எதிராக பல ட்விட்களை சித்தார்த் செய்து இருக்கிறார்.

சாய்னா நேவால்
அவ்வப்போது இவர் பாஜக பற்றி பேசும் காரணத்தால் பாஜகவினர் பலர் இவரை கடுமையாக விமர்சனம் செய்வதும் நடக்கும். இந்த நிலையில்தான் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சித்தார்த் கூறிய கருத்து ஒன்று பெரிய அளவில் சர்ச்சை ஆனது. பஞ்சாப்பில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் பாதியில் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

சித்தார்த் கருத்து
இந்த நிலையில் ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படி பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும். பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்பது பிரதமர் மோடிக்கு ஆதரவாக சாய்னா நேவால் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சாய்னா நேவாலின் ட்விட்டை ரீ ட்விட் செய்த சித்தார்த் இரட்டை அர்த்தம் வரும்படி கருத்து தெரிவித்து சாய்னாவை கிண்டல் செய்து இருந்தார்.

சர்ச்சை
பாலின ரீதியாக சித்தார்த்தின் ட்விட் அமைந்து இருந்தது. இந்த நிலையில் சித்தார்த் செய்த ட்விட்டை விமர்சனம் செய்திருந்த இந்திய மகளிர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை விடுத்தது. இந்திய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா இதில் சித்தார்த்துக்கு எதிராக தொடர்ந்து புகார் வைத்து வந்தார். சித்தார்த் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து இப்படி கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ரேகா சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சித்தார்த் இப்படி பேசுவது முதல்முறை அல்ல.

ரேகா சர்மா
இதற்கு முன்பே சித்தார்த் இப்படி பேசி இருக்கிறார். அவர் தொடர்ந்து பெண்களை இகழும் வகையில் பேசிக்கொண்டு இருக்கிறார். இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேகா சர்மா குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ரேகா சர்மா சார்பாக சித்தார்த்துக்கு எதிராக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு புகார் சென்றுள்ளது. சைலேந்திர பாபுவிற்கு சென்ற புகாரில், சித்தார்த் தொடர்ந்து இப்படி பெண்களை தவறாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

டிஜிபிக்கு தகவல்
இனி அவர் பெண்களுக்கு எதிராக பேசாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இப்படி செய்யாத வகையில் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. பெண்களை சமூகத்தில் அவமதிக்கும் வகையில் நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போலீசின் கடமை என்று ரேகா சர்மா டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ரேகா சர்மா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications