சிங்கார சென்னை 2.0! களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி! 166 கி.மீ நீள கேபிள், இன்டர்நெட் வயர்கள் கட்
சென்னை: மாநகராட்சி சார்பில் சமீப காலமாக சில ஆக்கப்பூர்வமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது சாலையில் உள்ள தேவையற்ற வயர்களை ஊழியர்கள் அப்புறப்படுத்த தொடங்கியுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கேபிள் மற்றும் இன்டர்நெட் வயர்களை அமைக்க கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு இருக்கையில், சிலர் விதிமீறலாக வயர்களை அமைத்திருப்பதாக தொடர் புகார்கள் வந்திருந்தன. இதன் அடிப்படையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி நடவடிக்கை
சென்னையை சிங்கார சென்னையாக (2.O) மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்களுக்கு இடையூறாக இருக்கும் சிறு சிறு விஷயங்களில் மாநகராட்சி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, மாடுகளை சாலையில் அலைய விடுவதை கட்டுப்படுத்துவது, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது என மாநகராட்சி ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், தற்போது விதிகளை மீறி தொங்கிக்கொண்டிருக்கும் வயர்களை அப்புறப்படுத்தும் பணிகளையும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வயர்களை அகற்றும் பணி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கேபிள் உள்ளிட்ட வயர்களை கொண்டு செல்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இவ்வாறு கட்டணம் செலுத்தாமல் விதிகளை மீறி வயர்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த வயர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தொடர் புகார்கள் வந்திருந்தன. அதுமட்டுமல்லாது இது போன்ற வயர்கள் மூலம் விபத்துக்களும் அடிக்கடி நடப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த புகாரையடுத்து, இந்த வயர்களை அகற்றும் பணிகளை மின்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டலம் வாரியாக
ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த மாநகராட்சி மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் பாலமுரளி, "சட்டத்திற்கு புறம்பாக கொண்டு செல்லப்படும் எந்த வயர்களாக இருந்தாலும் அவை அகற்றப்படும். 15 மண்டலங்களிலும் இதற்காக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு வாரம் ஒரு வார்டு தேர்வு செய்யப்பட்டு ஊழியர்கள் இந்த வயர்களை அகற்றுவார்கள்.

பாராட்டு
இப்பணிகள் வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி வரை நடைபெறும்" என்று பாலமுரளி கூறியுள்ளார். அதன்படி கடந்த 2 வாரத்தில் கோடம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட 15 இடங்களிலிருந்து சட்டவிரோதமாக தொடங்கவிடப்பட்டிருந்த சுமார் 165.87 கி.மீ நீளம் கொண்ட வயர்கள் அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications