ஜொலிக்குதே! வேற லெவலில் மாறிய “அண்ணா மேம்பாலம்”.. சென்னையின் சிறப்பை மீட்டெடுத்த ஸ்டாலின்!
சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தின் பொன்விழாவை முன்னிட்டு ரூபாய் 10.85 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைத்தார். வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தின் கண்கொள்ளாக் காட்சி காண்போரை அசர வைக்கிறது.
சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று அண்ணா மேம்பாலம். சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலத்தில், சென்னைக்கு சென்ற அனைவருமே பயணித்திருப்போம். தமிழகத்தின் முதல் சாலை மேம்பாலம், சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலம் தான். அன்றைய சூழலில் நாட்டிலேயே 3வது பெரிய மேம்பாலமாக இது இருந்தது.

தமிழ்நாட்டின் முதல் சாலை மேம்பாலம்: கடந்த 1969-ல் முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பேற்ற பின் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டு, வடிவமைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலம் இது. அப்போது ரூ.66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலத்தை, 1973 ஜூலை 1 ஆம் தேதி அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
கடந்த 1970 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை சாலை, ஜி.என்.ஷெட்டி சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்த நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
அண்ணா மேம்பாலம்: ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்த இடம் என்பதால் ஜெமினி பிரிட்ஜ் என்று கூறப்படும் இந்த மேம்பாலத்திற்கு "அண்ணா மேம்பாலம்" என கருணாநிதி பெயர் சூட்டினார். குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.

ரூ. 10.85 கோடியில் புனரமைப்பு: அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா காணும் நிலையில் அதை புதுப்பிக்க ரூ.8.85 கோடியை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஒதுக்கினார். மேலும், ஆயிரம் விளக்கு உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி பெறப்பட்டு, ரூ.10.85 கோடியில் அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு வண்ண மின் விளக்குகள் ஒளிர அழகுபடுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் தூண்கள் GRC பேனல்கள் கொண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திராவிட கட்டடக் கலையைப் பறைசாற்றும் வகையில் பாலத்தின் முகப்பில் உள்ள தூண்கள், பூங்கா பகுதியில் யாழி சிற்பங்கள், முக்கோண ஸ்தூபிகள், பித்தளைப் பலகையில் பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஜொலிக்கும் அண்ணா மேம்பாலம்: பொன்விழா ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ள அண்ணா மேம்பாலத்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், இரவு நேரங்களில் அண்ணா மேம்பாலம் ஜொலித்து வருகிறது.
"சென்னையின் அடையாளங்களுள் முதன்மையான அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அதன் பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவுடன்..." எனக் குறிப்பிட்டு, அண்ணா மேம்பாலம் வண்ண விளக்களில் ஜொலிக்கும் புகைப்படங்களை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications