சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என பேச்சு.. அன்வர்ராஜாவை அடிக்க பாய்ந்தாரா சி.வி சண்முகம்?
சென்னை: அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்குப் பிறகு நடைபெறும் இக்கூட்டமானது ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான அன்வர்ராஜா, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, அன்பழகன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்பட மாவட்ட செயலாளர்கள், அமைப்புச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொள்வது, அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு நிகழ்வுகள், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானாலும், தற்போது உட்கட்சிப் பூசல்களை எதிர்கொள்வது குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..

வலு இல்லாத தலைமை
அதிமுக மூத்த தலைவரான அன்வார் ராஜா சில ஊடகங்களில் பேசியபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டது தோல்விக்கு காரணம் எனவும், தற்போதைய கட்சித்தலைமை வலுஇல்லாமல் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

சசிகலாவுக்கு கட்சியில் இடம்
எனவே கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்கள்நலன் கருதி கட்சியை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்றும், இது குறித்து அனைத்து தரப்பினரும் பழைய விஷயங்களை மறந்து சசிகலாவை சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டுமென சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது..

எடப்பாடி எதிராக பேச்சு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை அவர் கூறி வந்த நிலையில், இன்றும் அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் அன்வர்ராஜா பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முன் வரிசையில் அமர்ந்திர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்வர்ராஜாவை அடிக்க பாய்ந்ததாகவும், அவரை சக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்டுப்படுத்தியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video

சண்முகம்
ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருக்கும்போது சரி தடாலடி நடவடிக்கைகள், வைரல் பேச்சுகள் என வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் சண்முகம். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக கூட்டத்தில் அவர் கோபம் அடைந்ததாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications