76வது குடியரசு தினம் 2025.. தேசிய கொடி ஏற்றிய குடியரசுத் தலைவர்.. மரியாதை வழங்கிய முப்படையினர்
டெல்லி: நாடு முழுக்க இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். இன்று டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ விழாவில் பங்கேற்று உள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் ராஜபாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

செங்கோட்டையில் கொடி ஏற்றும் பிரதமர் மோடி மக்கள் முன்னிலையில் முக்கியமான உரை நிகழ்த்த உள்ளார். நாடு முழுக்க மாநில முதல்வர்கள் சட்டமன்றங்களில் கொடி ஏற்றுவார்கள். இந்திய குடியரசுத் தினம் குறித்து சுவாரசியமான நொடிக்கு நொடி செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
என்னென்ன நிகழ்வுகள் நடந்தது :
தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு கடமைப்பாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடந்தது . குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அணிவகுப்பு, ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்கிறது. சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் ஜனாதிபதி வழங்கினார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கடமைப் பாதையில் கலை நிகழ்ச்சிகளும், வீரதீர செயல்களும், ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். காலை 10.30 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழாக்கள் நிறைவடையும்.
குடியரசு தின விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து கடமைப்பாதை வழியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.
குடியரசு தின அணிவகுப்பு:
மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன டிரோன்கள், ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப் படை சாகசமும் நடைபெற்றது. கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, குழந்தைகளின் கலாசார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன. பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்தன.
நாட்டின் கலாசார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும், 6 ஊர்திகள் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு புதிய நடன, கலை, இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications