கிரெட்டி கார்டு வாங்கியவர்களின் குரல் தெய்வத்துக்கே கேட்டிருச்சு..ரிசர்வ் வங்கி குட்நியூஸ்
சென்னை: கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு 3 நாட்கள் வரை அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைப்படி, இந்த 3 நாட்களுக்குள் நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்திவிட்டால், உங்களை 'தவணை தவறியவர்' என வங்கிகள் முத்திரை குத்த முடியாது. மிக முக்கியமாக, உங்கள் சிபில் ஸ்கோர் இதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
இன்றைக்கு சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் மாத சம்பளம் வாங்குவோர் கிரெடிட் கார்டு வலையில் சிக்குகிறார்கள். ஏனெனில் வாழ்க்கைச் செலவுகள் கழுத்தை நெரிக்கும் இந்தச் சூழலில், நடுத்தர வர்க்கத்தின் அவசரத் தேவைகளுக்குக் கை கொடுக்கும் ஆபத்பாந்தவனாக கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன.

ரிசர்வ் வங்கிக்கு கேட்டுவிட்டது
எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை வட்டியில்லாமல் கடனாக 50 நாட்கள் கொடுகின்றன. ஆனால், ஒரு நாள் தவணை தவறினாலும் விதிக்கப்படும் அபராதமும், வட்டியும் பலரையும் நிலைகுலையச் செய்துவிடும். இந்த வலியால் பலர் தவித்து வரும் நிலையில், இவர்களின் குரல் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கேட்டிருக்கிறது. இப்போது சாமானியர்களின் பக்கமாக முதல்முறையாக நல்ல உத்தரவை பிறப்பித்துள்ளது.
வட்டி வசூலிப்பார்கள்
பொதுவாக உங்களுடைய கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான கடைசி தேதி முடிந்துவிட்டால், அடுத்த நிமிடமே உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இனி அப்படி நடக்காது. பில் கட்ட வேண்டிய கடைசி தேதிக்கு பிறகும் 3 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
தவணை தவறியவர்
இந்த 3 நாட்களுக்குள் நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்திவிட்டால், உங்களை இனி 'தவணை தவறியவர்' அதாவது ஆங்கிலத்தில் சொல்வது என்றால் Defaulter என வங்கிகள் உங்களை முத்திரை குத்த முடியாது. மிக முக்கியமாக, உங்கள் சிபில் (CIBIL) ஸ்கோர் எனப்படும் கடன் தகுதியும் இதனால் பாதிக்கப்படாது. இதனால் குறைந்த வட்டியில் கடன் வாங்குவது உங்களுக்கு சாத்தியமாகும்.
மாத சம்பளம் வாங்குவோருக்கு என்ன நன்மை
சம்பளம் தாமதமாக வருவது அல்லது தொழில்நுட்பக் கோளாறால் பணம் சேருவதில் தாமதம் ஏற்படுவது போன்ற நேரங்களில், தேவையற்ற அபராதத் தொகையிலிருந்து மக்கள் தப்பிக்க முடியும். கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கான கடைசித் தேதி அன்று இரவு 12 மணிக்குள் கட்டியாக வேண்டுமே என்ற பதற்றம் இனி இருக்காது. இந்த 3 நாட்கள் என்பது ஒரு மிகப்பெரிய மன நிம்மதியைத் தரும். இந்தச் சலுகைக் காலத்தில் செலுத்தப்படும் தொகைக்கு அபராத வட்டி விதிக்கப்பட மாட்டாது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம் போட்டது ஏன்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர் நலனை விட, அபராதம் மற்றும் வட்டி மூலம் லாபம் ஈட்டுவதிலேயே அதிக ஆர்வம் காட்டத் தொடங்கின. ஒரு சிறிய தவறுக்காக ஒருவரின் கடன் வரலாற்றையே சிதைப்பது அறமற்றது என ரிசர்வ் வங்கி கருதியது. வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாகப் பிடுங்கப்படும் 'பெனால்டி' கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த 'கடிவாளம்' போடப்பட்டுள்ளது. வங்கிகள் தன்னிச்சையாகச் செயல்படாமல், வாடிக்கையாளர்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது
இரண்டாவது வாய்ப்பு
இறுதியாக கிரெடிட் கார்டு கடனை கட்டுவோருக்கு இந்த 3 நாள் அவகாசம் என்பது 'இரண்டாவது வாய்ப்பு'. அதற்காக இதையே வழக்கமாக்கிக் கொள்ளாமல், ஒரு பாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் ஆகும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மாத சம்பளம் வாங்குவோருக்கு ஓரளவு நிம்மதியை தந்திருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.














Click it and Unblock the Notifications