ஆளுநர்களுக்கு எதிரான போர்! தீ பரவட்டும்! புதிய முழக்கத்தை முன் வைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டை போல் டெல்லி சட்டமன்றத்திலும் ஆளுநருக்கு காலக்கெடு கோரி தீர்மானம் நிறைவேற்றவுள்ள கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், ''தீ பரவட்டும்'' என்ற புதிய முழக்கத்தை முன் வைத்து அதனை ஹேஷ் டேக்காவும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் அம்மாநிலச் சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு, அவற்றின் நிர்வாகத்தைத் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தடுக்கிறார்கள் என்றும் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியிருந்தார்.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, ஒன்றிய அரசையும் இந்தியக் குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தைத் தாம் பாராட்டுவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
அதே வழியில், ஆளுநர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கெஜ்ரிவால் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவாலுக்கு நன்றி கூறியிருப்பதோடு, ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் இறையாண்மையே உச்ச அதிகாரத்தை கொண்டது என்றும் எந்த நியமனம் ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையோ, சட்டமன்றத்தின் அதிகாரத்தையோ குறைத்து மதிப்பிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications