சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டம் தீவிரம்.. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: சாம்சங் இந்தியா ஊழியர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார். இதன்படி அமைச்சர்கள் முன்னிலையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த மாதம் தொடக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியுவை தொடங்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு தொழிற்சாலை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதனால், கடந்த 9-ந் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலையில் மொத்தம் 1,800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களில், 1,200 பேர் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பொருட்கள் உற்பத்தி 60 % குறைந்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தமிழக அரசின் தொழில் துறை, தொழிலாளர் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சாம்சங் இந்தியா நிறுவனத்துடனும், தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதுவரை 5 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், ஒரு மாத காலமாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, நாளை (7 ஆம் தேதி) 6 வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுவாக, சங்கம் தொடங்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே, சாம்சங் ஆலை நிர்வாகம் இதை ஏற்க வேண்டும் என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சம்பள உயர்வு, பணிச்சுமை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன. இவற்றை முன்வைக்க சங்கம் அவசியம் என்று ஊழியர்கள் கருதுகிறார்கள். ஆனால், சாம்சங் இந்தியா நிறுவனம், தொழிலாளர்கள் சங்கம் தொடங்குவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.












Click it and Unblock the Notifications