மாமனார் மாமியாரை, தாய் தந்தை போல கவனித்துக் கொள்ள வேண்டும்.. சௌமியா அன்புமணி கொடுத்த அட்வைஸ்!
சென்னை : "மாமனார் - மாமியாரை, தாய் - தந்தையரைப் போல கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்களை மதித்து, மரியாதை கொடுத்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்" என பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் சௌமியா அன்புமணி அறிவுரை வழங்கி உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் - அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக பிரிந்தனர். ஒரு தரப்பினர் ராமதாஸ் ஆதரவாளர்களாகவும், மற்றொரு தரப்பினர் அன்புமணி ஆதரவாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் பதவியை விட்டு நீக்கி வருகிறார். ஆனால், அந்த நிர்வாகிகள் பதவியில் தொடர்வதாக அன்புமணி அறிக்கை விட்டு வருகிறார்.

பாமகவில் தலைமைப் பதவி தொடர்பாக ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் கருத்து வேறுபாடு, தீவிரமடைந்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ், தான் தொடர்ந்து கட்சியின் தலைவராக இருப்பதாகவும், 2026 தேர்தல் கூட்டணி முடிவுகளை தானே எடுப்பேன் என்றும் உறுதியாகக் கூறி வருகிறார். எனவே, பாமகவில் குழப்பங்கள் நீடித்து வருகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர் சந்திப்பில் விமர்சித்துப் பேசி இருந்தார். சௌமியா தேர்தலில் நிற்பதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருந்ததாகவும், தனது குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை மீறி இது நடந்ததாகவும் கூறினார் ராமதாஸ்.
ராமதாஸ் பேசுகையில், "அன்புமணியும் சௌமியாவும் என்னிடம் கெஞ்சி தருமபுரியில் போட்டியிட அனுமதி பெற்றனர். ஆனால் இது எனக்கு உடன்பாடு இல்லை" என்று தெரிவித்தார். ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியின் நிர்வாகத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்தச் சூழலில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடந்த ஒரு திருமண விழாவில் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரான சௌமியா, இந்த நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதிகளுக்கு கட்சி சார்பில் பரிசுகள் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், "திருமணமான மணப்பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரை மதிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்து அவர்கள் வார்த்தைப்படி நடக்க வேண்டும். முக்கியமாக விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ வேண்டும்" என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன், மருமகள் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், சௌமியாவின் இந்த அறிவுரை, ராமதாஸ் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும், குடும்ப உறவுகளில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளை சுட்டிக்காட்டுவதாக உள்ளதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications