உச்சநீதிமன்ற உத்தரவால்.. பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? முன்னாள் நீதிபதி விளக்கம்
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளதால் அவர் மீண்டும் திருக்கோவிலூர் எம்எல்ஏ ஆகிறாரா என்ற கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பதில் அளித்துள்ளார்.
திமுக அமைச்சராக பொன்முடி இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பொன்முடிக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது நீதிபதிகள் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அது போல் அவருக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
ஏற்கெனவே இவர் குற்றவாளி என தீர்ப்பு கிடைத்ததுமே பொன்முடியின் எம்எல்ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்த நிலையில் அவருடைய திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் கற்பக விநாயகம் கூறுகையில் பொன்முடி வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் அவர் குற்றவாளி என சொல்லப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்கவில்லை. அவ்வாறு நிறுத்தி வைக்க சட்டத்தில் இடம் இல்லை. எனவே தீர்ப்பை நிறுத்தி வைத்தால்தான் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆகலாம். தண்டனையை நிறுத்தி வைத்ததால் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆக முடியாது.
ராஜீவ் காந்தி, பொன்முடி ஆகியோரின் வழக்கு நடைமுறைகள் வெவ்வேறானவை. எனவே அந்த வழக்குடன் பொன்முடி வழக்கை ஒப்பிட்டு அவர் மீண்டும் எம்எல்ஏ ஆவார் என சொல்ல முடியாது. இவ்வாறு கற்பக விநாயகம் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன: 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி பொன்முடியும் அவருடைய மனைவி விசாலாட்சியும் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்ரைய தினம் இருவரும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் அவருடைய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications