தலைவி டிரைலர் வேற லெவல்.. அனல் பறக்கும் பஞ்ச்.. கட்சி பேதம் மறந்து கை தட்ட வைக்கும் "கூஸ்பம்ப்" சீன்
சென்னை: வேற லெவல் பஞ்ச் டயலாக்குகளுடன் வெளியாகியுள்ளது "தலைவி" திரைப்படத்தின் டிரைலர். ஏ.எல்.இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு வெளியாக உள்ள திரைப்படம்தான் இது.
Recommended Video
ஏப்ரல் 23ம் தேதி தலைவி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தல் களத்தை இந்த திரைப்படத்தின் பஞ்ச் வசனங்கள் ஓரளவுக்கு நிரப்ப போகின்றன என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
ஆம்.. தனது அரசியல் வாழ்நாள் முழுக்க திமுகவை எதிரியாக சித்தரித்து வந்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இல்லாத களம்
ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் அவர் அப்படித்தான் பேசுவார். ஆனால் இந்த தேர்தல் களம் வித்தியாசமானது . ஜெயலலிதா இல்லாத வெறுமையை அதிமுக தொண்டர்கள் உணர்கிறார்கள். இந்த நேரத்தில்தான் தலைவி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
கவுரவர் கதை முடியும்
"மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு இதேதான் நடந்தது.. அவர் புடவையை இழுத்து அவமானப்படுத்தினர். கவுரவர்கள் கதையை முடித்து கூந்தலை முடிந்து, சபதத்தை முடித்தார்.. அந்த மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் இருக்கிறது.. "ஜெயா.." என்று கங்கனா ரனாவத் பேசும் வசனத்தின் போது "ஜெயா" என்ற சொல் மட்டும் பல முனைகளிலிருந்தும் எதிரொலிக்கும் வகையில் ஒலிவடிவம் செய்யப்பட்டுள்ளது . கண்டிப்பாக அது ஒரு கூஸ்பம்ப் சீன்.
புடவை இழுப்பு காட்சி
ஏனென்றால் சட்டசபை போன்ற ஒரு அரங்க அமைப்புக்குள், ஜெயா கதாபாத்திரத்தில் நடிப்பவர் புடவையைப் பிடித்து எதிரணி இழுப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு, பிறகு இறுதி ஊர்வலம் ஒன்றில், ஜெயா கதாபாத்திரம் கீழே தள்ளி விடுவது போன்ற ஒரு காட்சியை காட்டி விட்டு, அதைத் தொடர்ந்து இந்த வசனம் வருகிறது. இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் அல்லது அதிமுக தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காட்சி மற்றும் வசனம் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
அம்மாவா பார்த்தால்
"நீ மக்களை விரும்பினால் மக்கள் உன்னை விரும்புவார்கள்.." என்று எம்ஜிஆர் போன்ற தொப்பி வைத்துள்ள அரவிந்தசாமி கதாபாத்திரம் கூறுகிறது . இதைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷ் பிஜிஎம் தடதடவென எதிரொலிக்கிறது. ஜெயலலிதா போல உடல் முழுக்க போர்த்திய ஆடையுடன் கங்கனா ரணாவத் ஒரு மாடத்தில் தோன்றுகிறார். "என்னை அம்மாவா பார்த்தீர்கள் என்றால் எனது இதயத்தில் உங்களுக்கு இடம் இருக்கும்.. என்னை வெறும் பொம்பளையா பார்த்தீர்களென்றால்...." என்று கூறிவிட்டு அந்த வசனம் நிற்கிறது. உடனே ஜிவி பிரகாஷ் பிஜிஎம் மறுபடி உங்கள் செவிப்பறையை கிழித்து தொங்க விடுகிறது.
அதிமுக தொண்டர்கள் உற்சாகம்
ஜெயலலிதா மீது எந்த மாதிரி பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ, அதை இன்னும் மெருகேற்றி திரையில் கொண்டு வந்து இருக்கிறது தலைவி என்பதை இந்த ட்ரைலரை வைத்து பார்க்கும்போது தெரிகிறது. இது கண்டிப்பாக அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய டிரைலர். அதிமுக வாக்கு வங்கி பெண்கள்தான் .இந்த டிரைலரில் ஒரு பெண்ணாக இருந்து எப்படி அரசியலில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார்.. ஆண்கள் மட்டுமே சாதிக்க முடிந்த இந்த களத்தில் அவர் எப்படி தனித்து நின்றார்.. என்பது போன்று சில சில காட்சி அமைப்புகள் வேகமாக காட்டப்பட்டிருக்கின்றன. கண்டிப்பாக இது பெண்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
கட்சி கடந்து கைதட்டல்
அப்புறம் ஒரு கொசுறு தகவல்.. கட்சி பேதங்களை மறந்து விட்டு இந்த டிரைலரில் அனைத்து தரப்பும் ரசிக்கக்கூடிய ஒரு காட்சி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கங்கனா ரனாவத் உறுப்பினராக இருப்பது போன்ற ஒரு காட்சியில், இந்திரா காந்தி போன்ற தோற்றம் அளிக்க கூடிய பிரதமர் கதாபாத்திரத்தின் முன்பாக சரளமாக பேசி தமிழக நலனுக்காக ஜெயா வாதிடுவது போன்ற காட்சி இருக்கிறது. ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் என்பதை இந்த காட்சியுடன் பொருத்திப் பார்க்க முடிகிறது.
வட இந்தியா
ஜெயாவின் பேச்சை தொடர்ந்து ஒரு வட இந்திய அரசியல்வாதி கங்கனா ரனாவத்தை பார்த்து கேட்கிறார். "இவ்வாறு சிறப்பாக ஆங்கிலம் பேசும் ஒரு தென்னிந்தியரை நான் பார்த்தது இல்லை.." என்று. பாராட்டுவதை போல மறைமுகமாக தென்னிந்தியர்களை கிண்டல் செய்வது போல பேசுகிறார் அந்த அரசியல்வாதி. அதற்கு ஜெயா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா? இது போன்ற சிறந்த ஆங்கிலத்தை வட இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்கிறார் உறுதியான குரலில். கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் கட்சி பேதங்களை மறந்து கைதட்டப்போகும், "கூஸ் பம்ப்" வசனம் இதுவாகத்தான் இருக்க முடியும்.