அரிசி விலை கடும் உயர்வு.. 1 கிலோவுக்கு இவ்வளவா? 25 கிலோ சிப்பம் ரேட்டும் எகிறிது! காரணம் இதுதானாம்!
சென்னை: தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் போட்டி போட்டுக் கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கிச் செல்வதே விலை உயர காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்கறிகளின் விலை ஒரு பக்கம் உச்சத்திற்கு சென்று மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் நிலையில் அரிசி விலையும் உயர்ந்து வருவது மக்களை அதிர வைத்துள்ளது. மிக்சாம் புயல் மழை, வெள்ளம் காரணமாக விளைச்சல் குறைந்ததும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது.
அண்டை மாநிலங்களில் நெல் வரத்து குறைவால், ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் அறுவடை நேரத்தில் காற்று அதிகமாக வீசியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வழக்கத்தை விட விளைச்சல் கடுமையாக குறைந்ததன் காரணமாக, நெல் விலை அதிகரித்துள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் விலை ரூ. 5 வரை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தை மாதம் வழக்கமாக வரும் நெல் வரத்து மிகவும் குறைந்துள்ளதன் காரணமாக அரிசி விலை அதிகரித்துள்ளதாக மொத்த அரிசி வணிகர்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றுப் பாசனம் மூலம் வரும் அரிசி உற்பத்தி கிடைக்க இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்பதால் அது வரை விலை உயர்வு தொடரும் எனக் கூறப்படுகிறது.
அரிசி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தந்துள்ள அதே சமயம் அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஹோட்டல் தொழில் செய்பவர்களும், உணவு தொடர்புடைய சிறு தொழில்களை நடத்துபவர்களும் இந்த விலை உயர்வினால் கலக்கமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications