சாலைகளில் பள்ளம்.. 'நம்ம சாலை' ஆப்பில் புகார் செய்தால் உடனடி தீர்வு.. ஆச்சர்யப்படுத்தும் தமிழக அரசு
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து வைத்த 'நம்ம சாலை ஆப்' வழியாக புகார் தெரிவித்தால் சாலைகள் உடனடியாக தமிழக அரசு அதிகாரிகளால் சரி செய்யப்படுகிறது.
உங்களில் ஊரில் சாலை சரியில்லை என்றால் 'நம்ம சாலை' ஆப்பில் புகாரளிக்கலாம். அப்படி புகார் அளித்தால் நெடுஞ்சாலை துறை சார்பாக உடனே நமக்கு பதில் அளித்து, உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்யும் நடவடிக்கையும் எடுக்கிறார்கள்.

நமது ஊர்களில் தீர்க்கவே முடியாத பிரச்சனை என்றால் சாலை வசதி தான். சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே பலருக்கும் கவலையாக இருக்கும். ஏனெனில் நன்றாக போகின்ற போது சாலைகளில் ஏற்பட்டிக்கும் திடீர் பள்ளம், நம்மை விபத்திற்குள் தள்ளிவிடும். ஏன் சில நேரங்களில் காயம் அல்லது மரணம் கூட ஏற்படும்... சாலைகளில் பள்ளம் இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. மழை காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது அரசு துறைகளோ தோண்டினால் தான் பெரும்பாலும் பள்ளம் ஏற்படும்.
அதேபோல் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும் போது, அந்த வாகனங்கள் செல்லும் அளவிற்கு தரமாக சாலைகள் இல்லாவிட்டாலும், சில நாட்களிலேயே பள்ளம் ஏற்படும். மேற்கண்ட 3 காரணத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக சாலைகள் பள்ளமாகி விடுகின்றன. அப்படி பள்ளமாகும் சாலைகளை சீரமைக்க ஒரு நல்ல தீர்வினை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதுதான் நம்ம சாலை ஆப்... இந்த ஆப்பின் மூலம் உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
இந்த நம்ம சாலை ஆப்பை கடந்த அக்டோபர் இறுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நம்ம சாலை ஆப் மூலம் உங்களின் ஊரின் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகளின் குறைகளை சரி செய்ய முடியும். தேசிய நெடுஞ்சாலைகள் என்றால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும். இதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் சரி செய்யும். அதேபோல் ஊரக சாலைகள் மற்றும் மாநகராட்சி சாலைகளை, நகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் பள்ளம் என்றால், அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து தான் சரி செய்ய வேண்டும்.
நம்ம சாலை ஆப்பை பொறுத்தவரை மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைகளில் உள்ள பிரச்சனைகள் மட்டுமே தீர்க்கப்படுகிறது. நீங்கள் பயணிக்கும் சாலை மாவட்ட சாலை அல்லது மாநில சாலை என்றால் உடனே நம்ம சாலை ஆப்பில் போட்டோ எடுத்து தீர்வு கோரி புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், அடுத்த சில மணி நேங்களில் உங்களை போனில் அழைத்த சாலை தோண்டப்பட்டதற்கான காரணத்தை விவரிப்பார்கள்.. இல்லை யாரும் தோண்டவில்லை, அது பள்ளமாகி உள்ளது என்றால், அதன் பின்னர் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். மாநில நெடுஞசாலைகள் 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும். சாலை சீரமைக்கப்பட்ட பிறகு அந்த படங்களும் நம்ம சாலை ஆப்பில் பதிவேற்றப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை சாலைகள் சரி இல்லை என்றால் உங்கள் ஏரியா கவுன்சிலரை கேளுங்கள். அவர் சொன்னால் சாலை உடனே சீரமைக்கப்படும். ஏன் கவுன்சிலர் கூட வேண்டாம். ட்விட்டரில் சென்னை மாநகராட்சியை டேக் செய்து புகாரை பதிவு செய்யுங்கள், ஓரளவு பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். மற்ற ஊர்களில் உள்ள பிரச்சனைளுக்கு கவுன்சிலர்களை தான் கண்டிப்பாக கேட்கவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சொன்னால் உடனே அதிகாரிகள் ஆக்சன் எடுப்பார்கள்.
எனவே உங்கள் உள்ளாட்சி அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சியில் சாலை சரியில்லை என்றால், கவுன்சிலர்களை சரி செய்ய சொல்லி வற்புறுத்துங்கள். அவர்கள் நினைத்தால் நல்ல தரமான சாலைகளை உங்கள் ஏரியாவில் உடனே போட வைக்க முடியும். குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை நிச்சயம் தீர்க்க முடியும். கவுன்சிலர்கள் முடித்து வைக்க வேண்டிய பல பிரச்சனைகள் தான் இன்று, முதல்வர் அலுவலகம் வரை போகிறது என்பது கசப்பான உண்மை..












Click it and Unblock the Notifications