கொள்ளையடித்த பணத்தில் கார், ரூ 1 லட்சத்தில் வாஷிங் மெஷின்.. இரு மனைவிகளுடன் ஆடம்பர வாழ்க்கை
சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் ஒரு அமில விற்பனை கடையில் திருடிய ரூ 6 லட்சம் ரொக்கம் மற்றும் இரு தங்கக் கட்டிகளை கொண்டு இரு மனைவிகளையும் பாரபட்சமில்லாமல் சொகுசு வாழ்க்கையை வாழ வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் ஜெயின் (52). இவர் அதே பகுதியில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் கடந்த 25 ஆண்டுகளாக உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் அமிலங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 13 ஆம் தேதி ராஜேந்திர குமார் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது கடையிலுள்ள கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ 6 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்ய வைத்திருந்த 100 கிராம் எடை கொண்ட இரு தங்கக் கட்டிகளைக் காணவில்லை.

ரொக்கப் பணம்
காணாமல் போன தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடை ஊழியரான மனோஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருந்தபோது ராஜேந்திர குமாரின் நண்பர் என கூறி கடைக்குள் வந்த ஒரு நபர், தலைவலிப்பதாகவும் வெளியே சென்று டீ வாங்கி வருமாறும் தன்னை அனுப்பியதாக தெரிவித்தார்.

கடையில் யாரும் இல்லை
இதனால் ஓனரின் நண்பர் என கூறியதால் கடையில் யாரும் இல்லாததாலும் அவரை கடையில் விட்டுவிட்டு தானே தேநீர் கடைக்கு சென்று டீ வாங்கி வந்ததாகவும் அப்போது அந்த நபர் டீயை வேண்டாம் என கூறிவிட்டு ஓனர் வந்தால் தான் வந்து போனதை சொல்லவும் என கூறியதாகவும் வெளியேறிவிட்டதாகவும் மனோஜ் தெரிவித்தார்.

கல்லா பெட்டி
இதையடுத்து போலீஸார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடைக்கு வந்த அந்த நபர் கடையின் கல்லா பெட்டிக்கு திருட்டு சாவி போட்டு தங்கத்தையும் பணத்தையும் எடுத்து பையினுள் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. அதை வைத்து போலீஸார் விசாரணையை தொடக்கினர். விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த முகமது சமீர் (29) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

மும்பையில் தலைமறைவு
பின்னர் மும்பையில் தலைமறைவாக இருந்த சமீரை கைது செய்தனர். முகமது சமீருக்கு மும்பையில் ஒரு மனைவியும் பெங்களூரில் ஒரு மனைவியும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைத்து மும்பை மற்றும் பெங்களூர் விரைந்தனர். முகமது சமீர் கொள்ளையடிக்கும் பணங்களை இரு மனைவிகளும் பாரபட்சமின்றி கொடுத்து செலவு செய்துள்ளார்.

வாஷிங் மெஷின்
இந்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கையையும் வாழ்ந்த அவர் புதிய காரும், ரூ 1 லட்சம் மதிப்பிலான வாஷிங் மெஷினையும் வாங்கி தனது இரு மனைவிகளுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரிடம் இருந்து பணம் , நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய முயன்று வருகிறார்கள். இவர் உரிமையாளரின் நண்பர் போல் பல இடங்களில் கொள்ளையடித்து கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications