"கையெழுத்தெல்லாம் போட முடியாது சார்!" போலீஸிடம் எல்லாத்துக்கும் அடம் பிடிக்கும் ரவுடி நாகேந்திரன்!
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் 3 நாள் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த நிலையில் அதற்கான அறிக்கையில் கையெழுத்திட ரவுடி நாகேந்திரன் மறுத்துள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி வீட்டருகே கட்டுமான பணிகளை கவனித்துக் கொண்டிருந்த நிலையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வெட்டிச் சாய்த்தது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என அவருடைய ஆதரவாளர்கள் கருதிய நிலையில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தகவல்கள் வந்தன.
ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கில் நேற்று முன் தினம் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.
இவர் சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் நாகேந்திரன், (48 வயது) வடசென்னை பகுதியில் பெரிய தாதாவாக வலம் வந்தவர். தற்போது, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருக்கிறார். இதனால், நாகேந்திரனும், அஸ்வத்தாமனும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய பங்காக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் இருந்தது.
போலீஸார் விசாரணையில் அஸ்வத்தாமனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங்கிற்கும் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனுக்கும் பகை இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக இருந்த தென்னரசுவின் கொலையிலும் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தி வந்தாராம். இதையடுத்து அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தென்னரசு கொலை வழக்கில் நாகேந்திரனையும் ஒரு குற்றவாளியாக போலீஸார் சேர்த்துள்ளனர். இதனால் அவரால் நன்னடத்தை அடிப்படையில் கூட சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் எழுந்தது.
இதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என நாகேந்திரன் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. தொழிலதிபரை மிரட்டிய வழக்கிலும் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டிருந்தார். தனது தந்தையின் விடுதலையை தடுத்ததுடன் தன்னையும் சிறையில் அடைக்க ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என அவருடைய கொலைக்கு அஸ்வத்தாமன் திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இந்த நிலையில்வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை கடந்த ஒரு ஆண்டாக யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்த பட்டியலை வேலூர் சிறையில் இருந்து போலீஸார் வாங்கியுள்ளனர். அது போல் நாகேந்திரனை கண்காணிக்கும் தனி காவலரிடம் வீடியோ, ஆடியோ பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
ரவுடி நாகேந்திரனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில் வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை சென்னை போலீஸார் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி கைது செய்தனர். இதனால் இந்த சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோரை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அஸ்வத்தாமன் பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக அளித்த நிலையில் நாகேந்திரனோ விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையாம்.
எப்போது கேட்டாலும் எனக்கு எதுவும் தெரியாது, எனக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நாகேந்திரன் கூறுகிறாராம். அது போல் போலீஸார் 3 நாள் விசாரணை முடிவில் தயார் செய்திருந்த அறிக்கையிலும் கையெழுத்திட நாகேந்திரன் மறுத்துவிட்டாராம்.












Click it and Unblock the Notifications