ஆம்ஸ்ட்ராங் கொலை.. ஆந்திராவில் பதுங்கிய ரவுடி சீசிங் ராஜாவை “ஸ்கெட்ச்” போட்டு தூக்கிய போலீஸ்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், பிரபல ரௌடிகள் பலரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரௌடிகளையும் போலீசார் தேடி வந்தனர்.
ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜா, தனக்கென தனிக் கூலிப்படை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர். சென்னையில் மட்டுமின்றி ஆந்திராவிலும் சீசிங் ராஜா மீது கொலை வழக்குகள் உள்ளன. இதற்காக பல முறை சிறை சென்றுள்ளார். 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல ரௌடிகள் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், சீசிங் ராஜாவையும் போலீசார் குறி வைத்தனர். சீசிங் ராஜா தலைமறைவான நிலையில், சீசிங் ராஜாவின் கூட்டாளியான சஜித் தனிப்படை போலீசாரால் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சீசிங் ராஜா புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டி அவரை போலீசார் தேடி வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு போஸ்டர்கள் தாம்பரம் மாநகர காவல் சார்பில் சேலையூர், தாம்பரம் உட்பட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications