வாளில் கேக் வெட்டி வெற்றி கொண்டாட்டம்.. தவெக எம்எல்ஏ தாமு செயலால் வெடித்த சர்ச்சை!
சென்னை: தவெக வெற்றியினை பலரும் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ தாமு வெற்றிக் கொண்டாட்டத்தில் 2 அடி வாளை கொண்டு கேக் வெட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த தவெக நிர்வாகி லயோலா மணி தடுக்க முயன்ற போதும், அவரின் பேச்சை அலட்சியப்படுத்திய தாமு அரிவாளால் கேக்கை வெட்டினார். நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், மேலும் ஒரு சில கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

ராயபுரம் தொகுதி தாமு
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை தமிழ்நாடு முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் பல இடங்களில் தவெகவினர் வரம்பு மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களில் மொத்தமாக சத்தம் எழுப்பிக்கொண்டு செல்வது, சாலையில் பயங்கர சத்தம் எழுப்பும் பட்டாசுகளை கொளுத்தி மக்களுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொண்டர்கள்தான் இப்படி என்றால் தவெக எம்.எல்.ஏ ஒருவரின் செயலே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் தாமு போட்டியிட்டார். ஆட்டோ டிரைவரான தாமு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுகவின் சுபேர் கானை வீழ்த்தினார். அதிலும் ஜெயக்குமார் டெபாசிட் பறிகொடுத்தார்.
வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
ராயபுரம் தொகுதியில் 59,091 வாக்குகளை விஜய் தாமு பெற்றிருந்தார். திமுகவின் சுபேர் கான் 44,482 வாக்குகளும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 18,420 வாக்குகளும் பெற்று இருந்தார். ராயபுரத்தில் வென்ற சாமானியர் என்று தவெகவினர் கொண்டாடி வந்த நிலையில், இதனை கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் 2 அடி வாளை கொண்டு கேக் வெட்டியிருக்கிறார் தவெக எம்.எல்.ஏ தாமு. இத்தனைக்கும் அருகில் இருந்த தவெக நிர்வாகி லயோலா மணி தடுக்க முயன்ற போதும், அவரின் பேச்சை அலட்சியப்படுத்திய தாமு அரிவாளால் கேக்கை வெட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கடும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மன்னிப்பு கோருகிறோம்
வழக்கமாக ரவுடிகள்தான் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி, பின்னர் போலீசாரிடம் சிக்குவார்கள்.. ஆனால் ஒரு மக்கள் பிரதிநிதியே இப்படி செய்வதா? என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து இருந்தனர். இதற்கிடையே லயோலா மணி இது தொடர்பாக தனது விளக்கத்தை அளித்தார்.
லயோலா மணி கூறுகையில், "அது தற்செயலான நிகழ்வு.. அது பட்டாக்கத்தி வாள் இல்லை.. பரிசாக கொடுத்த வீர வாள்.. அங்கு நின்றவர்களின் விருப்பத்தினால் அப்படி செய்துவிட்டார். வருத்தமாக உள்ளது. மன்னிப்பு கோருகிறோம். இனி அதுபோன்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications