டாஸ்மாக் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10.. ஜனவரி 19 முதல் அமல்! காலி பாட்டிலை கொடுத்து பணம் பெறலாம்!
சென்னை: காலி மது பாட்டில்களை திரும்பப் பெற்றுக்கொண்டு 10 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப் பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது.

டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக் கொள்ளப்படும். காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ஒப்படைத்து, கூடுதலாக கொடுத்த 10 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பாட்டில் கழிவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு குவார்ட்டர் மது பாட்டிலுக்கும் எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கப்படுகிறது. இதில் அதோடு மேலும் 10 ரூபாயா என வெதும்புகின்றனர் குடிமகன்கள்.












Click it and Unblock the Notifications