தமிழக அரசு தரும் ஒரு லட்சம் ரூபாய்.. இளைஞர்கள் விண்ணப்பிப்பது எப்படி? அதிகாரி தகவல்
சென்னை: வேளாண் சார்ந்த தொழிலை பட்டதாரி இளைஞர்கள் தொடங்கினால் அவர்களுக்கு வங்கிக்கடனுடன் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் உற்பத்தி துறை கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா கூறினார். இந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 100 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளதாகவும், அதை எப்படி பெறுவது என்று அவர் விளக்கி உள்ளார்.
இன்றைய இளைஞர்கள் பலருக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கு மாறி உள்ளனர். பல இளம் தலைமுறையினர் விவசாயத்தை விட்டு விட்டு ஐடி தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டனர். தமிழகத்தில் விவசாயம் செய்வது முன்பைவிட குறைந்துவிட்டது. மானாவாரி பயிர்கள் உற்பத்தி ஒரு காலத்தில் மிக அதிகமாக இருக்கும். இன்று அவற்றை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தமிழகம் இருக்கிறது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டால் போதிய லாபம் கிடைப்பது இல்லை என்று குற்றம்சாட்டி பலர் அதனை விட்டு வெளியேறுகிறார்கள்.

அதேநேரம் சரியான சூழல்களை அறிந்த பயிர்களை விளைவித்து விவசாயம் செய்வோர் லாபம் ஈட்டவும் செய்கிறார்கள். வரும் தலைமுறையினருக்கு விவசாயத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கத்தில் அரசு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்கினால் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த ஆண்டில் 100 இளைஞர்களுக்கு வங்கிக்கடனுடன், தமிழக அரசின் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண் உற்பத்தி துறை கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், வேளாண் பட்டதாரி மட்டுமல்லாமல், எந்த பட்டதாரியாக இருந்தாலும் விவசாயம் சார்ந்த தொழிலை கொண்டு இருந்தால் அவர் மானியம் பெற தகுதி பெறுவார்கள். அவர் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க வேளாண் உட் கட்டமைப்பு நிதியில் விரிவான திட்ட அறிக்கையை கொடுக்க வேண்டும். அதன்படி முறையாக விண்ணப்பித்தால், இளைஞர்களுக்கு வங்கியில் இருந்து கடன் பெற உதவி செய்து 3 சதவீத வட்டி மானியம் பெறவும் உதவி செய்யப்படும்.
இதுதவிர அவர் தொடங்க போகும் தொழிலை பரிசீலித்து ரூ.1 லட்சம் மானியமும் அரசால் வழங்கப்படும். வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள விவசாயத்துறை இணை இயக்குனரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் விவசாய அதிகாரிகளை கொண்ட குழு இதை பரிசீலித்து தகுதியுள்ளவர்களின் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கும். அரசின் வேளாண்மைத்துறை அந்த விண்ணப்ப பட்டியலை பரிசீலித்து அவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும். இந்த ஆண்டிற்கு 100 பட்டதாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயை அரசு தரப்போகிறது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் . இந்த திட்டத்தில் விவசாயம் மட்டுமே செய்வோர் தான் விண்ணப்பிக்க முடியும். அதாவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் பட்டதாரிகள் பிரதமரின் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் (ஏ.ஐ.எப்.) கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் தொழில்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 10 மற்றும் 12-ம் வகுப்பு கல்வி சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம், தொழில் குறித்த விவரங்கள் ஆகியவற்றை வட்டார வேளாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள் வேளாண்மைத்துறை இணையதளத்தில் இருக்கிறது. அவர்கள் விவரமாக அறியலாம்" இவவாறு அபூர்வா ஐஏஏஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications