ஜூன் 22 முதல் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை? விஜய் பிறந்தநாளில் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' தொடக்கம்!
சென்னை: முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் ரூ.2.500 மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்க தவெக திட்டமிட்டு வருகிறது. இதற்காக நிதியமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் நிதி பிரச்சனை இருப்பதால், முதலில் ரூ.1,500 கொடுத்துவிட்டு படிப்படியாக ரூ.2,000, அதன்பின் ரூ.2,500 கொடுக்கலாமா என்றும் ஆலோசனைகள் நடக்கின்றன.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தங்களின் தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த புதிய மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தை தொடங்க தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை முழுமையாக மறுசீரமைத்து, அதற்கு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' எனப் புதிய பெயரிட தவெக முடிவு செய்துள்ளது. புதிய அரசு அமைந்தவுடன் இத்திட்டம் நிறுத்தப்படும் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போதைய 1.31 கோடி பெண்களுக்கும் மே மாதத்திற்கான தொகையான ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது தமிழ்நாட்டில் 1.31 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். இதற்கு ஆண்டுக்கு ரூ.15,600 கோடி செலவாகிறது. இதனை அப்படியே ரூ.2,500 ஆக உயர்த்தினால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.39,000 கோடி நிதி தேவைப்படும்.
தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி, முதல்கட்டமாக ஜூன் 22 முதல் இத்தொகையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்திவிட்டு, பின்னர் படிப்படியாக ரூ.2,500 ஆக உயர்த்தலாமா என்றும் அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தவெக தேர்தல் அறிக்கையின்படி, 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தற்போதைய பயனாளிகளில் சுமார் 15% பெண்கள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர். இவர்களை இத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவந்து, ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த 'வெள்ளை அறிக்கை' விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் மாத தொடக்கத்தில் கூட்டப்படவுள்ள தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்த ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மற்றும் அதன் புதிய தகுதி விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications