அடுத்த வாரம் எங்க மாமா வராரு.. வித் அவுட்டில் பயணித்த 51,000 பயணிகள்! 2.8 கோடி ஃபைன் போட்ட ரயில்வே!
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து இதுவரை சுமார் 2 கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிக்கெட் இல்லாமல் பயணித்த 51,000 பேர் பிடிபட்டுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், வழக்கத்தை விட ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் இன்னும் அதிக அளவில் கூட்டம் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால், ரயில் நிலையங்களில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் செல்வோரை முறைப்படுத்தவும் தற்போதுள்ள ரயில்வே பாதுகாப்பு படையினரைவிட கூடுதல் போலீசார் தேவைப்படுகின்றனர்.

தீபாவளி கூட்டம்
எனவே, ஜோலார்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் செவ்வாயன்று சென்னை வந்தடைந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அவர்களுக்கு பாதுகாப்பு பணிகள், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே உள்ளனர்.
டிக்கெட் இல்லா பயணம்
தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்கள். இவர்கள் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்நிலையில், இந்த நிலையில் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து இதுவரை சுமார் 2 கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படை
பண்டிகை காலங்களில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து ரெயில்களில் பயணிகள் நெரிசல் உச்சத்தை எட்டுகிறது. இத்தகைய சூழலில் சிலர் டிக்கெட் எடுக்காமல் அல்லது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்பது வழக்கமாக மாறியுள்ளது. இது ரெயில்வே சட்டம் பிரிவு 138-க்கு உட்பட்ட குற்றமாகும். அந்த வகையில் ரெயில்வே அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சிறப்பு சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
ரூ.2.8 கோடி அபராதம்
இந்த ஆண்டு விடுமுறையை முன்னிட்டு, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 10 வரை ரெயில்வே அதிகாரிகள் கூடுதல் டிக்கெட் பரிசோதகர்களை நியமித்து, சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தினர். 15 நாட்களில் நடைபெற்ற இந்த சிறப்பு சோதனைகளில் மொத்தம் 51,557 பேர் டிக்கெட் இல்லாமல் பயணித்தது உறுதி செய்யப்பட்டு பிடித்தனர். இவர்களிடமிருந்து ரூ.2 கோடியே 86 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் டிக்கெட் சேவை
ரயில்வே அதிகாரிகள் கூறும் போது," விடுமுறையின்போது டிக்கெட் இல்லாமல் பயணிப்பது அதிகரித்தது. குறிப்பாக மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பயணங்களுக்கு முறையான டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்றனர். மேலும், ரயில்வே துறை மக்கள் வசதிக்காக ஆன்லைன் டிக்கெட் சேவை, QR ஸ்கேன் டிக்கெட் வசதி, UTS மொபைல் ஆப்ஸ் வழியாக டிக்கெட் வாங்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications