பொத்தேரியில் கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பலியானோர் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைமலைநகர் அருகே உள்ள பொத்தேரி வழியாக தாம்பரம் நோக்கி இன்று காலை 10 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி அருகே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல பாதை உள்ளது. சாலையை கடப்பதற்காக 10-க்கும் மேற்பட்டோர் பைக்கிலும், நடந்து செல்லவும் காத்திருந்தனர்.

அப்போது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் சாலையைக் கடந்து செல்ல காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. தாறுமாறாக ஓடிய லாரி பொதுமக்கள் மீது மோதி அருகில் இருந்த சிக்னல் கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சர்வீஸ் சாலை தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அங்கு பேருந்து நிறுத்தத்திற்காக காத்திருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியானவர்களில் 2 பேர் தனியார் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொத்தேரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்ர்த்தசாரதி என்பவருக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.
எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications