வங்கியில் வாரம்தோறும் பணம் எடுக்கிறேன்..ரூ.2 ஆயிரம் யாரிடம் இருக்கு தெரியுமா..சீனுக்கு வந்த எச்.ராஜா
சென்னை: என்கிட்ட ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட இல்லை. என்னை மதிரியான சாமானியர்கள் கிட்ட 2 ஆயிரம் ரூபாய் கிடையாது. எனவே 2 ஆயிரம் திரும்ப பெறுவது சரியான முடிவு. மக்களுக்கு பாதிப்பு வராது. என்று எச் ராஜா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை விநியோகிக்கவும் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சிலர் கருப்பு பணம் பதுக்கியவர்களுக்குத்தான் பாதகம் என்றும் சாமானிய மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் எதுவும் இல்லை என்றும் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
எனினும், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கர்நாடக சட்டமன்ற தேர்தல் படு தோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் மத்திய அரசின் 2 ஆயிரம் ரூபாய் வாபஸ் குறித்த அறிவிப்பை விமர்சித்து இருந்தார். அதுபோல காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றன.

நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, 2 ஆயிரம் ரூபாய் வாபஸ் குறித்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறியிருப்பதாவது:
2 ஆயிரம் ரூபாய் நோட்டை நான் பார்த்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டது. ஒரு ஆறு மாதமாக நீங்கள் யாராவது பார்த்து இருக்கிறீர்களா.. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இப்போது புழக்கத்திலேயே இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புதிதாக வரவில்லை. வங்கியில் போய் பணம் எடுக்கும் போதும் 2 ஆயிரம் நோட்டு கொடுப்பது இல்லை.

நான் ஒவ்வொரு வாரமும் வங்கியில் பணம் எடுக்கிறேன். வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன். 500 ரூபாய் நோட்டுத்தான் கொடுக்கிறேன். 2 ஆயிரம் நோட்டு கொடுப்பது இல்லை. 2 ஆயிரம் நோட்டு பதுக்குபவர்கள் கையில் மட்டும் தான் இருப்பது மத்திய அரசுக்கு தெரிந்து இருக்கிறது.
செப்டம்பர் வரை மாற்றுவதற்கு நேரம் கொடுத்து இருக்கிறார்கள். எந்த ஏடிஎம் முன்னாடியும் நிற்க வேண்டாம். எந்த வங்கியிலும் லைனில் நிற்க வேண்டாம். என்கிட்ட ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட இல்லை. என்னை மதிரியான சாமானியர்கள் கிட்ட 2 ஆயிரம் ரூபாய் கிடையாது. எனவே 2 ஆயிரம் திரும்ப பெறுவது சரியான முடிவு. மக்களுக்கு பாதிப்பு வராது.












Click it and Unblock the Notifications