ரூ.4 கோடி விவகாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு உதவி.. சிக்கிய 3 பாஜக தலைகள்.. ஆதாரத்துடன் சிபிசிஐடி!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் உதவியதாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கூறி இருக்கின்றனர். பாஜகவின் நிர்வாகிகளான கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் மற்றும் கோவர்தன் ஆகிய 3 பேரும் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலம் உறுதியாகி இருக்கிறது. இதனால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படை தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அந்த வகையில் சென்னை - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பின் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தைக் கொண்டு வந்த 3 பேரைத் தாம்பரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மேலாளர் சதீஷ் என்பவரும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரனுக்கு ரயில் மூலம் பணம் அனுப்பப்பட்டதாகப் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் உள்ள பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து ரூ.4 கோடி பணம் கைமாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டனர். அதேபோல் இந்த வழக்கில் ஹவாலா தரகர் சூரஜ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாமீன் கோரி ஹவாலா தரகர் சூரஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் சிபிசிஐடி தரப்பில், நயினார் நாகேந்திரனுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர், கோவர்தன் ஆகியோர் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலமாக உறுதியாகியுள்ளது. கோவர்தனின் ஓட்டுநர் விக்னேஷ் மூலமாக ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளுக்குப் பதிலாக ரூ.97.92 லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஹவாலா தரகர் சூரஜ் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலமாக உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக பிரமுகர்கள் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சிக்கலில் மாட்டி இருப்பதாக பார்க்கப்படுகிறது. விரைவில் சிபிசிஐடி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications