“மணிப்பூருக்கு என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?” ஆர்.எஸ்.பாரதி கேள்வி!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை தானே சவுக்கால் அடித்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவரின் செயல்பாடுகள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. இப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் விஷயத்தையும் ஊதி பெரிதாக்க நினைத்தார்கள். ஆனால் அந்த கொலை சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்து விஷயங்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன.

பொள்ளாச்சி சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் போராட்டங்கள் பெருசாக நடந்தன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஒரு மணி நேரத்துக்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அண்ணாமலை வேடிக்கை காட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்து கொண்டிருக்கிறார். எல்லா அரசியல் தலைவர்களும் முதுகில் அடித்துக் கொள்ள முடியுமா? அவருக்கு வயது இருக்கிறது அடித்துக் கொள்கிறார் எனக்கு 78 வயதாகிறது என்னால் அடித்துக் கொள்ள முடியுமா? அரசியல் தலைவர்களுக்கு என போராட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தானதாக இருக்கிறது. அண்ணாமலையின் நடவடிக்கையை பாஜகவில் இருக்கும் தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து.
அப்படி பார்த்தால் மணிப்பூருக்கு எவ்வளவு போராட்டங்கள் நடத்த வேண்டும்? உத்தரப் பிரதேசத்திற்கு தினமும் போராட்டம் நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை கோவை காளப்பட்டி பகுதியில் இருக்கும் தனது வீட்டின் முன்பு அண்ணாமலை சாட்டையால் தன்னை தானே அடித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் இன்று முன்னெடுத்துள்ள போராட்டத்தை, வரும் நாட்களில் தீவிரப்படுத்துவோம்.
தனிமனிதனுக்கு ஆட்சியாளர் மீது இருக்கும் கோவத்தை காண்பிக்க அல்ல, கண்முன் எதிர்கால தலைமுறை அழிகிறது. கல்வி, பொருளாதார, சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருகிறது. போராக இருந்தாலும் பெண்ணின் மீது கைவைக்க கூடாது என்பது தமிழர்களின் மரபு. இன்று பெண்களின் மீது, அவர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் தொடருகிறது. 6 முறை என்னை சாட்டையால் அடித்துக்கொண்டு இருக்கிறேன்.
முருகனிடம் அதனை வலியுறுத்துவோம். கிடைக்கும் வாய்ப்புகளில் மக்களுக்கு உண்மையை உணர்த்துவோம். காவல்துறையில் இருந்து வெளியே வரும்போது, 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் & கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியை கண்டறிந்தாலும், ஏன் கைது செய்யவில்லை என அந்த தாய் கேட்டார். அந்த கேள்வி என்னை இங்கு கொண்டு வந்தது. சாதாரண நிகழ்வை போல பேசி, பின் மீண்டும் செல்வது எனக்கு வருத்தத்தை தருகிறது. தமிழக மக்களுக்கு வேள்வியாக இதனை செய்ய வேண்டும்.
பாஜகவினர் மக்களுடன் இருங்கள், அவர்களுக்காக உழைப்போம். ஐயா மன்மோகன் சிங் மறைவையொட்டி, இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பு மதியம் வெளியாகும். நமது மண்ணில் உடலை வருத்தி செய்யும் நிகழ்வுகளுக்கு பலன் இருக்கும். இது சாதாரண நிகழ்வு. முருகனுக்கு 6 சாட்டையடி என்பது, எனக்கு நானே கொடுத்துக்கொண்டது என்பதைவிட, சமுதாயத்தில் நிகழும் குற்றங்களை குறிக்கிறது. தவறு செய்யும் ஆட்சி வெளியேற வேண்டும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications