1000 ரூபாய் வாங்கிட்டீங்களா? விரிவடையும் திட்டம்.. சென்னை நிகழ்ச்சியில் மாஸ்க்குடன் பங்கேற்ற பெண்கள்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டமானது, அடுத்தக்கட்டத்துக்கு இன்று நகர்ந்துள்ளது.. சென்னையில் இது தொடர்பாக நடந்த விழாவில் பெண்கள், திரளாக பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்கள்.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

அவைகளில், 8 லட்சம் பேர் ரூ.1000 உரிமைத் தொகை பெற தகுதிவாய்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.
வங்கி கணக்கு: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 14ம் தேதி மட்டும பயனாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.. இந்த மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் மக்களின் வசதிக்காக முன்கூட்டியே உரிமைத்தொகையை வரவு வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் எழவும், அரசும் இதனை பரிசீலித்தது.
அதன்படி, புதிதாக மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு, இன்று முதல் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.. மற்றொருபக்கம், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களும் தகுதிவாய்ந்தவர்களும் 1000 ரூபாய் பெற விண்ணப்பம் செய்யலாம் என்று சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், பெண்கள் தரப்பில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முதல்வர் பெருமிதம்: இதனிடையே, மகளிர் உரிமைத்தொகையினை இரண்டாவது கட்டமாக வழங்கும் திட்டத்தை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, "கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தேன். என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது. உங்களைப் பார்க்கும்போது உடல் வலி குறைந்து மகிழ்ச்சி மேலிடுகிறது. தொண்டை வலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்வு இருக்கக்கூடாது என வந்தேன்.
மருத்துவர் அறிவுரையை மீறி இந்த விழாவிற்கு வந்துள்ளேன். மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என சிலர் விமர்சித்தார்கள்.. ஆனால், சொன்னதை செய்வோம்- அதன் அடையாளமே மகளிர் உரிமைத்திட்டம். சொன்னதைச் செய்ததால் உங்கள் முன்பு தைரியமாக நிற்கிறேன். மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது" என்றார்.
மீண்டும் மாஸ்க்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டிருந்தது... அதை அனைவரும் அணிந்து விழாவில் அமர்ந்திருந்தனர்.. தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டதால், பல பகுதிகளிலும் சளி, இருமல் போன்றவை பரவுவதால் அனைவரும் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படியே, முதல்வரின் விழாவில் முகக்கவசம் தரப்பட்டது.
பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மழைக்கால நோய்களாக இந்த காய்ச்சல் பாதிப்பு இனி அதிகரிக்கும் என்கிறார்கள்.. அதனால், காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது..
சமூக இடைவெளி: அதைவிட முக்கியமாக, பொது மக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் பாதிப்பு தெரியவந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications