₹765 கோடி எடப்பாடியின் "நடுக்கம்".. பாஜகவுக்கு அவரும் வர்றாரா? அதிமுக கூட்டணி ஸ்டிராங் ஆகுது போலயே
சென்னை: அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளதாக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.. ஆனால், தங்களை மிரட்டி பாஜக கூட்டணி வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தாலும், அதிமுக -பாஜகவுக்குள் தொடர்ந்து பரபரப்புகளும், எதிர்பார்ப்புகளும் கூடியிருக்கின்றன. இன்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் என்பதால், கட்சிக்குள்ளேயே நிர்வாகிகள் புது வியூகத்தை கையில் எடுத்துள்ளனர்.
3 நாட்களுக்கு முன்பு அமைச்சர் கீதா ஜீவன் ஒரு விழாவில் பேசும்போது, "எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வீட்டு கஜானாவை நிரப்பினார், சசிகலா அம்மாவை எட்டி உதைத்தார்.. அதிமுகவை கைப்பற்றினார்.. இப்போதுவரை மத்திய அரசுக்கு தலையாட்டி கொண்டிருக்கிறார்.. எடப்பாடியின் சம்பந்தி வீட்டில் ஒரே ஒரு ரெய்டு நடத்தினார்கள்.. ரூ.765 கோடி வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தனர்.. உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று கூட்டணி வைத்து விட்டார்" என்று விமர்சித்திருந்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து திமுக இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், அதிமுக, பாஜக கட்சிகளிடையேயான நெருக்கம் கூடிவருவதாக தெரிகிறது. நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர்கள் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியிருந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் சந்திப்பு ஏன்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளான திருப்பதி நாராயணன், வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்..
இன்றைய தினம் அதாவது மே 12ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக பாஜக நிர்வாகிகள் எடப்பாடியின் வீட்டுக்கு சென்றதாக தகவல் வெளியானது. ஆனால், வரப்போகும் தேர்தல் குறித்து, ஒருங்கிணைந்த பணிகள் மற்றும் கட்சி நிலைப்பாடுகள் குறித்து, இவர்கள் அனைவருமே ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
அதுமட்டுமல்ல, பாமக, தேமுதிக கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.. ஏற்கனவே, ராஜ்ய சபா கேட்டும் அதிமுக கடைசிவரை தராத அதிருப்தியில் தேமுதிக உள்ளது. எனவே, இந்த முறை திமுக அல்லது தவெக கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும்போது, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? தெரியவில்லை.
அதேபோல, திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக நிறுவனர் ஆசைப்பட, பாஜகவுடன் கூட்டணி வைக்க பாமக தலைவர் விரும்புவதாக தெரிகிறது. பாமகவுக்குள்ளேயே இன்னும் இணக்கம் இல்லாத சூழலில், அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது என்று தெரியவில்லை. எனினும், தங்களது கூட்டணியை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும், பாமக, தேமுதிகவுடன் அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
இன்று எடப்பாடி பிறந்தநாள்
இன்னொருபக்கம், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 73வது பிறந்தநாள் என்பதால், இவ்விழாவை வெகுசிறப்பாக கொண்டாட கட்சியினர் முடிவு செய்துள்ளனர். எனவேதான், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய ,நகர செயலாளர்கள் என அனைவரும் கிராமம் முதல் நகரம் வரை இப்பிறந்தநாள் நிகழ்ச்சிகளை இன்று முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கெல்லாம் காரணம், வரவிருக்கும் தேர்தலுக்கு அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் மக்கள் மனதில் இன்னும் அழுத்தமாக பதிய வைக்கவேண்டும் என்பதற்கான மறைமுகமான பிரச்சாரம்தானாம்..
இதன் வெளிப்பாடாக இன்று, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், எடப்பாடி பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் ஆண்டாள் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளுடன் வாழவும், மீண்டும் தமிழக முதலமைச்சராக வரவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
இதுபோல் இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் கொண்டாட உள்ளனர். ஆக மொத்தம், எதிர்முகாமில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் திமுகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications