வெள்ளை தொப்பி, காக்கி பேண்ட்.. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி.. சென்னையில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.
விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று பேரணி நடத்த முடிவு செய்தனர். தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கோரியது. ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. இதன்படி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போலீசார் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியாக சென்றனர். வெள்ளை சட்டை, காக்கி பேண்ட், தலையில் தொப்பியுடன் பேரணியாக சென்றனர்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் பேரணியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பாரத் மாதா கி ஜெய்.. என்ற கோஷத்துடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியாக சென்றனர். கோவையில் சிவானந்தா காலனியில் இருந்து அம்ருதா வித்யாலயம் பள்ளி வரை பேரணி நடைபெற்றது.
அதேபோல வடவள்ளி பகுதியிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்தினர். மதுரை சர்வேயர் காலனியில் இருந்து புதூர் பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தென்காசியிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியாக சென்றனர். திருப்பூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணிக்கு அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு காட்டமான கேள்விகளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி தருவது குறித்து உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கனவே விதிமுறைகளை வகுத்துள்ளது.
அப்படி இருக்கும் போது அற்ப காரணங்களை சொல்லி அனுமதி வழங்க மறுப்பது ஏன்?, இதுபோன்ற காரணங்களை சொல்லி அனுமதி மறுக்கும் போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? ஒரு மாவட்டத்தில் பல இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு காரணங்களை போலீஸ் சொல்கிறது. அப்படி என்றால் திமுக பவள விழா நிகழ்வுகளுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கியது எப்படி?" என்று சரமாரியாக கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து ஆர்எஸ் எஸ் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications