இனிமையான சொற்களையே பேச வேண்டும்... பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு..!
சென்னை: சர்க்கரை பொங்கலை போல் இனிமையான சொற்களையே பேச வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுரை நல்கியுள்ளார்.
சென்னை மூலக்கடை பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர் அங்கு உரையாற்றிய போது இதனைக் கூறினார். மேலும், தனது உரையின் தொடக்கத்தில் பொங்கல் வாழ்த்துகள் என்பதை தமிழில் உச்சரித்து அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியடைய செய்தார்.
சர்க்கரை பொங்கல் எப்படி தித்திப்புடன் உள்ளதோ அதேபோல் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் இனிமையானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார். தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே என்ற திருக்குறளை தமிழில் குறிப்பிட்டுக் காட்டிய மோகன் பகவத், கடும் வார்த்தை பிரயோகங்களால் ஏற்படும் காயங்களுக்கு மருந்தே கிடையாது எனத் தெரிவித்தார்.
யாருடைய மனமும் காயப்படும் படியான வார்த்தைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை மோகன் பகவத் தனது உரையில் சுட்டிக்கட்டினார். இனிமையான சொற்களே நன்மை பயக்கும் என அவர் தெரிவித்தார்.
மதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை பக்கத்தில் வரவிடாமல்.. மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி..!
அன்பும், இனிமையும் நாம் பயன்படுத்தக் கூடிய சொற்றொடர்களில் இருக்க வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்தார். முன்னதாக பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மேலும், பொங்கல் விழாவை தொடர்ந்து நடைபெற்ற கோமாதா பூஜையிலும் மோகன் பகவத் கலந்துகொண்டார். தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது போற்றுதலுக்குரியது என்றும் பாராட்டு தெரிவித்தார்.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு நடைபெறும் பொங்கல் கொண்டாட்டங்களில் ராகுல்காந்தி, ஜே.பி.நட்டா, மோகன் பகவத் என முக்கிய பிரமுகர்கள் தமிழகம் வந்து கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.