வீடு தேடி வந்த மம்தா பானர்ஜி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பரிசு.. என்ன புத்தகம்?
சென்னை: சென்னை வந்த மேற்கு வங்க மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த புத்தகம் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த மம்தா பானர்ஜி, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
மம்தா பானர்ஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் வாசலுக்கு வந்து பொன் ஆடை அணிவித்து வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் உடன் இருந்தனர்.
'பூனைக்கு மணி கட்டும் நேரம் வந்துவிட்டது' -ஆளுநர் ரவி மீது தமிழக காங்கிரஸ் ஆக்ரோஷம்!
ஸ்டாலின் - மம்தா சந்திப்பு
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் கூட்டமாக செய்தியாளர்களை சந்தித்த போது மம்தா பானர்ஜி க்கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய இல.கணேசனின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக நான் சென்னை வந்தேன். ஸ்டாலினை சந்திக்காமல் நான் எப்படி சென்னையில் இருந்து செல்வேன். எனவே, அவரை சந்திப்பது எனது கடமையென்று நான் அறிவேன்.
சகோதர - சகோதரி
இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதாவது பேசுவோம். மக்கள் நலன் சார்ந்த அரசியல் குறித்து பேசுவோம். மக்களின் முன்னேற்றம் குறித்து உரையாடுவோம். அரசியல் கடந்து மக்களின் மேம்பாடு குறித்த உரையாடல் சிறந்தது என்று நான் கருதுகிறேன். இது தனிப்பட்ட, மரியாதை நிமித்தமான, சகோதர - சகோதரி உறவுகளுக்கு இடையேயான சந்திப்பு. இதிலிருந்து நீங்களே, இந்தச் சந்திப்பு அரசியல் சார்ந்ததா, சமூகம் சார்ந்ததா, கலாச்சாரம் சார்ந்ததா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
என்ன புத்தகம்?
வெளிமாநில தலைவர்கள் சந்திக்கும்போது, தமிழ் பற்றிய புத்தகங்களையும், தமிழ்நாட்டின் வரலாறு குறித்த புத்தகங்களையும் வழங்குவதை மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையின் பலகாரங்களை வழங்கியுள்ளார். அதேபோல் திமுகவின் வரலாறு குறித்த முக்கிய புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். அந்த வகையில் திமுகவின் தொடக்க காலமான 1949 முதல் திமுக ஆட்சியமைத்த ஆண்டான 1967 வரையிலான "Rule of the Commoner" DMK and the formation of political in Tamilnadu in 1949 to 1967 என்ற புத்தகத்தை பரிசாக வழங்கி உள்ளார்.
யார் எழுதிய புத்தகம்?
இந்த புத்தகத்தை ராகன் குரை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமசந்திரன், விஎம்எஸ் சுபகுணராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தில் திராவிட இயக்கம் உருவாக்கிய அரசியல் மற்றும் சமூக தாக்கம் பற்றி விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.