ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்க போகும்.. ரஷ்யா, சீனா, வடகொரியா? ஸ்டன் ஆகி நிற்கும் அமெரிக்கா, இஸ்ரேல்
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க பல்வேறு நாடுகள் உதவி செய்ய தயாராக இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு அணு ஆயுத உதவி செய்ய தயாராகும் நாடுகள்
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான மெட்ரோவ் "அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை ஈரான் தொடர்ந்து உற்பத்தி செய்யும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், எதிர்காலத்தில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "ஈரானுக்கு அணு ஆயுதங்களை நேரடியாக வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன" என்று கூறியுள்ளார். எந்தெந்த நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. ஆனால் ரஷ்யா, சீனா, வடகொரியா இந்த உதவியை செய்யலாம். நீண்ட காலமாக ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வளர்ந்து வரும் மோதலைத் தீர்க்க, இரு தரப்பிற்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்வந்தார். மேலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு நல்ல அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கவும் ரஷ்யா உதவி செய்ய முன்வந்தது. ஆனால் இதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் ஒரு பங்கு வகித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், டிரம்ப் 2018 இல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.
கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்தார்.
ஈரானை தாக்கிய அமெரிக்கா
இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய பல்வேறு நாடுகள் உதவி செய்ய தயாராக இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி கூறியுள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications