எல்காட் எம்டி ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் திடீர் ராஜினாமா.. பின்னணி என்ன?
சென்னை: ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பணியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அனீஷ் சேகர் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ஐடி அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் நல்ல நட்புடன் இருப்பதால் அவர் ஐடி துறைக்கு சென்னைக்கு எல்காட் எம்டியாக மாற்றப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்த கையோடு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர். கடந்த சில மாதங்களாக எல்காட் எம்டியாக இருந்த அனீஷ் சேகர் இன்று தனது ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை திறம்பட பணியாற்றியவர் அனீஷ் சேகர் ஐஏஎஸ்.
இதனிடையே அனீஷ் சேகரின் ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா ஏற்றுக் கொண்டுள்ளார். மருத்துவரான அனீஷ் சேகர், தனது சொந்த மாநிலமான கேரளத்தில் மருத்துவர் பணியைத் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த அனீஷ் சேகர், கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
அனீஷ் சேகர் பல்வேறு விதமான அதிரடி மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவர் மதுரை ஆட்சியராக இருந்தபோது மேற்கொண்டார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை வலியுறுத்தும் வகையில், ஆட்சியர் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு சைக்கிளிலேயே சென்று கவனத்தை ஈர்த்தார்.
இவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். துடிப்பான இளைஞராக பணியாற்றி வந்த அவர் தன்னுடைய சொந்த காரணத்திற்காக ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications