தேர்தல் தேதி அறிவிச்சாச்சு! தந்தை-மகன் பிரச்சனை நாளை சரியாகும்! கட்சி? பாமக வழக்கில் நீதிபதி கேள்வி
சென்னை: தந்தை- மகன் பிரச்சனை நாளை சரியாகலாம் என ராமதாஸ்- அன்புமணி இடையே தொடரப்பட்ட பாமக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பான உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து பாமக பெயர், சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த மனு மீது மட்டுமே வாதங்களை வைக்க அனுமதிக்க முடியும் எனக்கூறி, நிராகரிக்க கோரி மனு மீது மட்டும் இரு தரப்பு வாதங்களை வைப்பதற்காக வழக்கின் விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.
அங்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கட்சியின் பொதுச் செயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதால் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தன்னையும் பாமக வழக்கில் இணைக்க வேண்டும் என கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த மனு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி தமிழ்ச்செல்வி, "தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய போகிறீர்கள், தந்தை - மகன் பிரச்சினை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்துதான் இந்த வழக்கில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும்.
பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை இந்த வழக்கில் இணைப்பதால் என்ன பிரச்சினை" என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆவணங்களை எதிர்மனுதாரருக்கு வழங்க வேண்டும், அன்புமணி தாக்கல் செய்த வழக்கும் நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications