பாஜக மேலிடம் கூறுவதை அண்ணாமலை கேட்பதே இல்லையே.. இவர் கூட்டணியை முறித்துவிடுவாரா?.. எஸ்.வி.சேகர்
சென்னை: கூட்டணி தர்மம் இருந்தால் அதை கடைப்பிடிக்க வேண்டும் இல்லாவிட்டால் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தனி நோக்கத்துடன் அண்ணாமலை செயல்படுகிறார். தேவையில்லாமல் வாய் சவடால் விடுவது கட்சிக்கு எப்போதுமே நன்மை தராது. அரசியலில் அண்ணாமலைக்கு ஆரம்ப கட்ட அனுபவமே கிடையாது.

கூட்டணி தர்மம் என்று இருந்தால் அதை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் ஆரம்பத்திலேயே முறித்துக் கொள்ள வேண்டும். கூட்டணியை முறித்துக் கொள்வதும் கடைப்பிடிப்பதும் அண்ணாமலை கையில் கிடையாது. டெல்லியில் பாஜக தலைமைதான் முடிவு எடுக்க முடியும்.
மேலிடத்தில் கூறுவதை கேட்டுக் கொண்டு நடந்தால்தான் கட்சி வளர்ச்சி அடையும். தற்போது அண்ணாமலை செய்து வரும் காரியங்கள் அவரது பெயரையும் புகழையும் வளர்த்துக் கொள்வதற்காக மட்டும்தான். என்னை போன்று கட்சிக்காக உழைக்கின்றவர்களை ஓரம் கட்டிவிட்டார்கள். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டவுடன் அவர் யாரையும் அரவணைத்து செல்லவில்லை என எஸ்.வி.சேகர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்றும் தான் கட்சியில் சேர்ந்தது பிரதமர் நரேந்திர மோடிக்காகத்தான் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் அண்ணாமலையின் நடைப்பயணத்தால் எந்த பயனும் இல்லை. அவருடைய மருத்துவர் உடல்நலனுக்கு நல்லது என கூறியிருந்திருப்பார். அதனால் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டிருக்கலாம். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது.
அண்ணாமலை தமிழகத்தில் அதிமுக கூட்டணி வரவே கூடாது என்பது போல் பேசி வருகிறார். அதிமுக கூட்டணிதான் பாஜகவுக்கு தமிழகத்தில் பலம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவில் இருப்பவர்கள் மோடிக்காகவும் அமித்ஷாவுக்காகவும் கூட்டணி தர்மத்தை மதித்தாலும் என்றைக்கு ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தவறாக பேசினாரோ அதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் மன்னிக்க தயாராக இல்லை என தெரிவித்திருந்தார்.
தற்போது அண்ணாமலை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து சில கருத்துகளை பேசியுள்ளார். இது உண்மைக்குப்புறம்பானது என அதிமுக கூறி வருகிறது. தங்களின் முன்னோடிகளான ஜெயலலிதா, அண்ணாதுரை உள்ளிட்டோரை எப்போது அண்ணாமலை அவதூறாக பேசினாரோ இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications