என்னா கூட்டம்.. சபரிமலையே திணறி போச்சு! புக்கிங் செய்யாமல் போன 2 நாளாகும்! தரிசனத்துக்கு கட்டுப்பாடு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்பாட் புக்கிங் தரிசனம் மூலம் 20,000 பேர் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், இனிமேல் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் பக்தர்கள் வந்தால் அவர்களில், 20 ஆயிரம் பேருக்கு மேல் வருபவர்கள் மறுநாள் தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு மண்டல பூஜை கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. அதற்கு முந்தைய நாள் சபரிமலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு வருகின்றனர்.
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சீசனின் இரண்டாவது நாளிலேயே நெரிசல் ஏற்பட்டு பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு அலட்சியமாக செயல்பட்டதாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சபரிமலை நெரிசல்
இந்நிலையில் மண்டலபூஜையின் மூன்றாவது நாளான நேற்று பக்தர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. கடந்த காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பேர் வரை வந்த நிலையில் நேற்று ஒரு லட்சம் பேருக்கு மேல் கோவிலுக்கு வருகை தந்தனர். இதை அடுத்து பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் புக்கிங் மூலமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஸ்பாட் புக்கிங்
ஆனால், ஆன்லைன் முன்பதிவு இன்றி ஸ்பாட் புக்கிங் மூலம் சிலர் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் முதல் 30,000 பேர் வரை ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் 30 ஆயிரம் பேர் வரை ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை 20,000 ஆக குறைத்து நேற்று அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிரடி அறிவிப்பாக வரும் 24ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் மூலம் 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
5000 பேர் அனுமதி
அதற்கு பிறகு மீண்டும் 20000 பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்குப் பிறகு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஸ்டார்ட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு இல்லாத பக்தர்கள் 20,000 பேர் மேலுக்கு வந்தால் அவர்கள் தங்க வைக்கப்பட்டு அடுத்த நாள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்பாட் புக்கிங் செய்வதற்காக நிலக்கல் பகுதியில் 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தரிசன கட்டுப்பாடு
மேலும், ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடப்பந்தல் பகுதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம் போல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் திட்டமிட்டு பயணம் செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications