சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக.. சென்னை டூ கோட்டயம் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!
சென்னை: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டயம் வரையிலான வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இன்று காலை தொடங்கியது.
சபரிமலை ஐயப்ப கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் கடந்த ஆண்டுகளை விட வரலாறு காணாத பெரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் சராசரியாக 65,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வர். ஆனால் நடப்பாண்டில் சராசரியாக 80,000 முதல் 90,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதனால் தரிசன நேரமும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் பெருந்திரளாக இருப்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கேரளாவில் போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்திருக்கின்றன.
இதனிடையே சபரிமலை பக்தர்களின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவித்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டயம் ரயில் நிலையம் வரை இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சபரிமலை செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06151) இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டயம் புறப்பட்டது. சென்னை பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திரிசூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன் வழியாக கோட்டயம் செல்கிறது வந்தே பாரத் ரயில். இந்த ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்கிறது. இன்று மாலை 4.15 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை இந்த ரயில் சென்றடையும். இதேபோல நாளை மறுநாள் மற்றும் வரும் 22-ந் தேதியும் சென்னை சென்ட்ரல் டூ கோட்டயம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
கோட்டயத்தில் இருந்து மறுமார்க்கமாக 16,18,23,25 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோட்டயத்தில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அன்று மாலை 5.15 மணிக்கு வந்தடைந்துவிடும்.












Click it and Unblock the Notifications