5,000 பேரை திரட்டிக்கொண்டு கமலாலயம் செல்வேன்.. நிறைய செலவு பண்ணிருக்கேன்.. கொதிக்கும் பாஜக நிர்வாகி!
சென்னை : ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 5,000 பேரை திரட்டிக்கொண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று கேட்க முடிவெடுத்துள்ளோம் என க்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் இ.எம்.டி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கை பாஜகவில் புயலைக் கிளப்பியுள்ளது.

கூண்டோடு கலைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது. புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

புதிய நிர்வாகி
இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி ஆர்.முருகேசன் என்பவரை நியமனம் செய்துள்ளார் அண்ணாமலை. ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்த இ.எம்.டி.கதிரவன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் கூண்டோடு பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தன் ஆதரவாளர்களோடு கமலாலயம் சென்று நீதி கேட்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நீக்கப்பட்ட மாவட்ட தலைவர் கதிரவன்.

பெரிய தொகை செலவு செய்துள்ளேன்
இதுதொடர்பாகப் பேசியுள்ள நீக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் இ.எம்.டி. கதிரவன், "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அழைத்து வந்து அமிர்த விழா என்ற பெயரில் கடலிலேயே மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறேன். பெரிய தொகையை செலவழித்து கட்சிக்காக பாடுபட்டேன். பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திடீரென தொலைபேசியில் அழைத்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக கலைக்கப்படுகிறது என்று சொன்னார். எதற்காக கலைக்கப்படுகிறது? நல்லமுறையில் பணிகள் செல்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர் சில காரணங்களைச் சொன்னார்.

5000 பேரோடு கமலாலயம் செல்வேன்
அவரிடம், இதுதொடர்பாகப் பேச அவரிடம் தேதி கேட்டிருக்கிறேன். எந்த விளக்கமும் கேட்காமல் என்னை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 5,000 பேரை திரட்டிக்கொண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று கேட்க முடிவெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இ.எம்.டி.கதிரவன், கமலாலயத்திற்கு தனது ஆதரவாளர்களோடு செல்லப்போவதாகக் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications